தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் தடை? எதற்கு அனுமதி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 2ஆவது வாரமாக இன்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 2ஆம் அலை உச்சம் தொட்ட பிறகு, வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இதனால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. திரையரங்கு தொடங்கி பலவற்றுக்கும் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதே நிலைதான்.. மீண்டும் தாண்டவமாடும் கொரோனா.. டேட்டா கூறுவது என்ன
ஓமிக்ரான்
இந்தச் சூழலில் தான் கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றியது. உலகின் அனைத்து பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு திடீரென உயரத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த டிச. கடைசி வாரத்திற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து. நேற்று மட்டும் இந்தியாவில் 2.60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் நிலை மோசம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.31 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு 15.3%ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் மிக மோசமாக ஒரே நாளில் 8978 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே பொங்கல் நாட்களான கடந்த ஜன. 12 முதல் 18 வரை வழிபாட்டுத்தலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்கே வேண்டும் எனக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு ஊரடங்கும் ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு
இதனிடையே வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் தினமான இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினத்தில் பொதுவாக மக்கள் கடற்கரை போன்ற பொழுதுபோக்கு தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். அப்படி ஒரே இடத்தில் அதிகப்படியான நபர்கள் செல்லும்போது, கொரோனா பரவல் சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எதற்கு அனுமதி
இன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும். பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் செயல்படும் என்றாலும் கூட அதில் இருந்து பார்சல் மட்டும் வாங்கிக்கொள்ளலாம். மேலும், அவசரத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடகை வாகனங்களில் பயணம் செய்யலாம். திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குச் செல்பவர்களுக்குப் பத்திரிக்கைகளுடன் சென்றால் அனுமதி அளிக்கப்படும். புறநகர் ரயில் சேவை குறைந்த அளவில் இயங்கும்.
எதற்கு அனுமதி இல்லை
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இருக்காது. கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் முழு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் எச்சரிக்கை
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.