தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா.. 14 வயது சிறுவன் உட்பட 335 உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதைவிடச் சற்று குறைவாக 33,075 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலே வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

நேற்றைவிட குறைவு
தமிழகத்தில் நேற்று 33,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதைவிடச் சற்று குறைவாக 33,075 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களாகும். தமிழகத்தில் இதுவரை 16,31,291 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல இன்று மட்டும் மாநிலத்தில் 1.56 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1327 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்களாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் இணை நோய்கள் இல்லாத 78 பேர் உட்பட 335 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எந்தவித இணை நோயும் இல்லாத 14 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 183 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 152 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18005 ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 2,19,342ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 2,31,596ஆக உயர்ந்துள்ளது. அதேபோல ஒரே நாளில் மட்டும் 20,486 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 13,81,690 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 6150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் ஒரே நாளில் கொரோனாவால் 86 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல கோவையில் 3264 பேருக்கும் செங்கல்பட்டில் 2154 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications