தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. 99 சிறார்கள் உட்பட 1,538 பேருக்கு இன்று கொரோனா
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 99 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறார்களாகும்.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்தது. கொரோனா 2ஆம் அலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், டெல்டா கொரோனாவை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளும் இதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவில்லை.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1,61,974 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 99 சிறார்கள் உட்பட மொத்தம் 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் இதுவரை 26,11,837 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 93 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சிறார்களான வைரஸ் பாதிப்பு 99ஆக உயர்ந்துள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் நேற்று 0.9ஆக இருந்த நிலையில் இன்று அது 1ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 2ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து அரியலூர் மற்ரும் தஞ்சை மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 1.6ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாகவே பாசிட்டிவ் விகிதம் உள்ளது. சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.8ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சிகிச்சை பலனிற்றி 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 18 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 3 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள், 2 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். அதிகபட்சமாகக் கோவையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 34,878 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களும் மாநிலத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 17,559 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 17,322ஆகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1,753 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தமாக இதுவரை 25,59,637 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தொடர்ந்து கோவை மாவட்டத்திலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இன்று 209 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில் 189 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு (108), ஈரோடு(132) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications