தமிழகத்தில் இன்று 1551 பேருக்கு கொரோனா.. கோவை உட்பட இந்த 4 மாவட்டங்களில் நிலைமை சற்று மோசம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட 93 சிறார்கள் உட்பட மொத்தம் 1551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை உட்பட 4 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதலில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு முதல் இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரே ஊரடங்கில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. கடந்த காலங்களில் இல்லாத வகையில் இந்த முறை ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி, தியேட்டர் திறப்பு என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்பட்டது.

தினசரி கொரோனா பாதிப்பு
இருப்பினும், அந்தளவு கொரோனா பாதிப்பு எதுவும் அதிகரிக்கவில்லை. தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,63,230 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 வயதுக்குட்பட்ட 93 பேர் உட்பட மொத்தம் 1551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தமிழகத்தில் இதுவரை 26,10,299 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் தொடர்ந்து சில நாட்களாகவே ஒன்றுக்குக் கீழாக உள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.4ஆகவும் கோவை மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 2.1ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் பாசிட்டிவ் விகிதம் மிக மிக குறைவாகவே உள்ளது. இது ஒரு நல்ல செய்தியாகும். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சிகிச்சை பலனிற்றி 21 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 3 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 34,856ஆக அதிகரித்துள்ளது

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 17,797ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை இன்று 17,559ஆகக் குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,768 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், ஒட்டுமொத்தமாக இதுவரை 25,57,884 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தொடர்ந்து கோவை மாவட்டத்திலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இன்று 230 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தலைநகர் சென்னையில் 182 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு (122), ஈரோடு(115) ஆகிய மாவட்டங்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications