தமிழகத்தில் 1800க்கு கீழ் தினசரி வைரஸ் பாதிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் 100ஐ தாண்டிய கொரோனா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று தொடர்ந்து 66ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இன்று மாநிலத்தில் 1785 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் தொட்டது. இதையடுத்து நிலைமை கையை மீறி செல்லாமல் இருக்க மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உருமாறும் கொரோனா.. 2 டோஸ் போதாது, மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம்.. எய்ம்ஸ் இயக்குநர்
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் 66ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மொத்தம் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1785 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று மாநிலத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 94 சிறார்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 25,50,282 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல மாநிலத்தில் இன்று 26 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 21 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களாகும். மேலும், இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் எவ்வித இணை நோயும் இல்லாதவர்கள், 9 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை 33,937 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல தற்போது தமிழ்நாடு முழுவதும் 22,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர இன்று மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 2,361 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,93,583 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
இன்றும் கோவை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 164 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோட்டில் 127 பேருக்கும் சென்னையில் 122 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் சேலத்தில் 102 பேருக்கும் தஞ்சையில் 103 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் மட்டுமே தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கும் மேல் பதிவாகியுள்ளது.