குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து 22ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில், இன்று மாநிலத்தில் 15,108 பேருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்தது. இதையடுத்து மாநிலத்தில் 2 வாரத்திற்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரே, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கின் பயனாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் 22ஆவது நாளாகத் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,82,878 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 வயதுக்குட்பட்ட 605 சிறார்கள் உட்பட மொத்தம் 15,108 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்களாகும். மாநிலத்தில் இதுவரை 23,39,705 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் சிகிச்சை பலனிற்றி 374 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 244 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 130 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று எவ்வித இணை நோயும் இல்லாத 101 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதேபோல 50 வயதுக்குட்பட்ட 84 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 29,280 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் தற்போது 1.62 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 27,463 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 21,48,352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் 73 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் அதிகபட்சமாகக் கோவையில் 1982 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஈரோட்டில் 1353 பேருக்கும் சேலத்தில் 894 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.