குட்கா முறைகேடு.. தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை.. பரபரப்பு தகவல்கள்
சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம், சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்கா முறைகேடு தொடர்பான விசாரணை தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக இடைக்கால குற்றப்பத்திரிகையை சிபிஐ ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில்தான் சம்பந்தப்பட்ட காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அளித்து, விசாரிக்க சிபிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால் நீண்டகாலமாக விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது விசாரணை மீண்டும் சுறுசுறுப்படைய தொடங்கியுள்ளது.
தற்போது, தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக நியமிக்கப்பட்ட டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் கடந்த மே 8-ம் தேதி, சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இவர் பதவி வகித்தார். மேலும் மாதவரம் குட்கா குடோனில், சிக்கிய டைரியில் இவரது பெயரும் இடம் பெற்று இருப்பதன் காரணமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நாளை புத்த பூர்ணிமா.. மேற்கு வங்கம் (அ) வங்கதேச இந்து கோயில்களை குறி வைக்கும் மனிதவெடிகுண்டுகள்
முதல்கட்டமாக சம்மன் அனுப்பிய போது அசுதோஷ் சுக்லா, சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ எச்சரித்த பிறகு, கடந்த 8ம் தேதி இவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் என்று அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
2012 முதல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காலத்தில்தான் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மிக அதிகமாக தமிழகத்தில் விற்பனையாகியுள்ளன. அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் என்ற அடிப்படையில் எந்த நடவடிக்கையும் ஏன் நீங்கள் எடுக்கவில்லை என்பது போன்ற கேள்விகள் இவரிடம் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.