பாஜக மேலிடம் மீது தமிழக நிர்வாகிகள் அதிருப்தி... சமாதானம் செய்து சரிகட்டுவாரா எல்.முருகன்..?
சென்னை: தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பல சீனியர் நிர்வாகிகள் கட்சி மேலிடம் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் பலர் இருக்க, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருக்கும் ஒருவரை தேடிச்சென்று அழைத்து பதவி கொடுத்தது ஏன் என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
மேலும், புதிய தலைவர் எல்.முருகன் பற்றிய விவரம் அறிவதற்காக நேற்று மாலை முதல் பல செய்தியாளர்கள் தமிழக பாஜக நிர்வாகிகளை தொடர்புகொண்ட நிலையில் பலரும் இணைப்பை துண்டித்தனர்.
6 மாதங்கள்
கடந்த செப்டம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவர் பதவியிடத்துக்கு ஒரு வழியாக புதிய தலைவர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ள வழக்கறிஞர் எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக கட்சி மேலிடம் நியமித்திருக்கிறது. இந்த நியமனத்தை சற்றும் எதிர்பார்க்காத பாஜக சீனியர்களான வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, முருகானந்தம், உள்ளிட்டோர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அதனை அவர்கள் வெளிக்காட்டி கொள்ளாமல் புதிய தலைவருக்கு அலைபேசி மூலம் வாழ்த்துக் கூறினர்.
கடும் முயற்சி
இதனிடையே முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் எப்படியும் தன்னை தான் தலைவராக நியமிக்கக்கூடும் என எதிர்பார்த்து காத்திருந்தார். இதற்காக அவர் மாதத்தில் 15 நாட்களாவது டெல்லியில் முகாமிட்டு கடந்த 3 மாதங்களாக கடும் முயற்சி செய்துவந்தார். ஆனால் எந்த லாபியும் அமித்ஷாவிடம் எடுபடவில்லை. இதேபோல், தமிழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ரூட்கள் மூலம் தலைவர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வந்தனர். ஆனால் எதுவும் கைகொடுக்கவும் இல்லை, கரை தேற்றவும் இல்லை.
சந்திப்பு
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பியதும், சீனியர் நிர்வாகிகளை அவர்களின் இல்லம் தேடிச்சென்று சந்தித்து வாழ்த்து பெற்று ஒத்துழைப்பு கொடுக்குமாறு ஆதரவு கேட்க இருக்கிறாராம். அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமரசம் செய்யவும் முருகனிடம் பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். மேலும், தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி பாஜகவை தமிழகத்தில் பலப்படுத்துவேன் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சபதம் செய்திருக்கிறாராம் எல்.முருகன்.
பயணம்
இதனிடையே டெல்லியில் இருந்தவாறு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முருகன், தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பாஜகவை கொண்டு சேர்ப்பதே தனது தலையாய பணி என்றும், சட்டமன்ற தேர்தலில் பாஜக உறுப்பினர்களை பேரவைக்கு அனுப்பி வைப்பதே தனது குறிக்கோள் எனவும் தெரிவித்திருக்கிறார். முருகன் வகித்து வரும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவி வரும் மே மாதத்துடன் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.