கொரோனா கட்டுப்பாட்டால் தேர்வு எழுதாத பிளஸ் 2 மாணவர்களுக்கு மறுதேர்வு.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: கொரோனா கட்டுப்பாட்டால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு நாள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் எல்கேஜி முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுத் தேர்வு
அதாவது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெறும் என அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை என கடந்த 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
கல்வியாளர்கள்
இந்த நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்ச்சி நிலை குறித்து பெற்றோர் குழப்பமான சூழலில் இருந்தனர். மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர்களது முந்தைய தேர்வுகளின் செயல்பாட்டை வைத்து தேர்ச்சி அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
அறிவிப்பு
இதனிடையே தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்த நிலையில் 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஓரிரு தேர்வுகளே இருந்த நிலையில் அது நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தேதி அறிவிப்பு
அவர் கூறுகையில் தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும். அதுபோல் கொரோனா கட்டுப்பாட்டால் பிளஸ் 2 மாணவர்களுக்கான கடைசி தேர்வில் பங்கேற்க முடியவில்லை என மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து அதுபோல் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும். அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் அறிவித்தார். புதுவையிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.