“வேற லெவல்” உயரும் தமிழ்நாடு.. மொத்தம் 1,281 பாலங்கள்! ரூ.5,837 கோடியில் விறுவிறுக்கும் தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல ஆயிரம் கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டு இருக்கும் நிலையில், தாமதமாக பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1,281 தரைப்பாலங்களை 2026க்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலைத் துறையின் கீழ் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைந்து முடிக்கும்படி முதலமைச்சர் முக ஸ்டாலின் மண்டல ஆய்வு கூட்டங்களில் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு பொதுப்ணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்து முக்கிய அறிவுரைகளை வழங்கினார்கள்.
2026 ஆம் ஆண்டு ஆண்டுக்குள் அனைத்து தரைப் பாலங்களும் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும். பாலப் பணிகள் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளான மின் கம்பங்கள் இடம் மாற்றம், குடிநீர் குழாய்கள் இடம் மாற்றம், மரங்களை அகற்றுதல், நில எடுப்பு பணிகள் போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

விரிவான கள ஆய்வுக்கு பின் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என்றும், மதிப்பீடு தயார் செய்யும்பொழுது, கள ஆய்வுகள், ஆற்றின் நீரியியல் விபரங்கள். மண் பரிசோதனைகள் போன்றவற்றை கவனம் செலுத்தினால் செயல்பாட்டின் போது கால தாமதத்தை தவிர்க்கலாம் எனவும், பொதுவாக பாலப்பணிகள் மேற்கொள்ள மழை காலங்கள் இல்லாத போது அடித்தளம் அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பாலப்பணிகளின் முக்கியம் கருதி பொறியாளர்கள், ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு மேற்கொண்டு தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் எவ வேலு வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் தற்போது நபார்டு நிதி உதவியுடன் ரூ.1,586 கோடி மதிப்பில் 276 பாலப்பபணிகள் நடைபெற்று வருகின்றன. 40 ரயில்வே மேம்பாலங்களின் பணிகளில் ரயில்வே திட்டப்பணிகளின் கீழ் ரூ.1,456 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை - அவிநாசி சாலையில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.1621 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. அதேபோல், சென்னை பெருநகர பகுதியில் 2 ஆற்றுப்பாலங்கள். 2 சாலை மேம்பாலங்கள் மற்றும் 3 இரயில்வே பாலங்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட மேம்பாட்டுத் திட்டத்தில் 23 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,017 பாலப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு. 740 பால பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள 277 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலை அலகில் 4 ஆற்றுப்பாலங்கள், 8 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 9 சாலை மேம்பால பணிகள் ரூ.1,174 கோடி மதிப்பில் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த பணிகளை குறித்த காலத்தில் முடித்திடவும், ஒப்பந்த காலத்தை கடந்தும் பணிகள் முடிக்காத ஒப்பந்தாரர்களிடம் கால தாமத்திற்கான விளக்கத்தை கேட்குமாறும், பிற பணிகள் அனைத்தும் ஒப்பந்த காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications