5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. கூட்டுறவு சங்கங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
நகைக்கடன் தள்ளுபடி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: நவம்பர் 1-ந்தேதி வரை நகைக்கடன் தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என்று அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டுறவு துறையின்கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவைகள், குறைந்த வட்டியில் தங்க நகைகளுக்கான அடமான கடன்களை வழங்குகின்றன...
இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இதனிடையே, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது...

திமுக ஆட்சி
இதையடுத்து திமுக ஆட்சி அமைந்ததுமே, எப்போது அந்த நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்கள் மத்தியில் எழுந்தது.. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்... நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்..

அரசாணை
இதையடுத்து, நகைக்கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும்? தங்கள் நகைகள் எப்போது கைக்கு வந்து சேரும்? என்ற அடுத்த எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தது. இதையடுத்து, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இப்போது இது தொடர்பாக மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது..

தள்ளுபடி
நவம்பர் 1-ந்தேதி வரை தள்ளுபடி செய்த அசல் தொகை மற்றும் அதற்கான வட்டியை கணக்கிட்டு விவரம் அனுப்ப வேண்டும் என்று அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும், அதன் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்... தள்ளுபடி செய்த நகைக்கடன் தொகை தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மொத்த தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு அந்த தொகையை சங்கங்களுக்கு விடுவிக்க ஏதுவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனவாம்.

தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி தரப்பட்டு, ஆட்சி அமைந்ததும் மறக்காமல் அந்த வாக்குறுதியை நினைவூட்டி, சட்டப்பேரவையில் அதை அறிவித்தது மட்டுமல்லாமல், அரசாணையும் வெளியிட்ட நிலையில், தற்போது அடுத்தக்கட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது.. இதையடுத்து, இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்களிடம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications