டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆட்சியரிடம் முறையீடு செய்ய சட்டம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
சென்னை: விதிகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடாமல், விதிகள் படி அமைக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறி, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சிப் பகுதிகளில், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும்; மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திலும் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல், தங்கள் விருப்பம் போல் மதுக்கடைகளை மூடியுள்ளதாகவும், விதிமீறல் கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தது சட்டத்துக்கு புறம்பானது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகளை மூடும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விதிமீறல் கடைகளை மூடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என அரசுத்தரப்பில் ஆஜரான அரசுகூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications