நூலகங்களில் இலவச வைஃபை வசதி; அமேசான் கிண்டிலில் 10 லட்சம் புத்தகங்கள் - படிக்கலாம் வாங்க!
அமேசான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கிண்டிலில் உள்ள 10 லட்சம் நூல்களை இனி அரசு பொதுநூலகங்களில் அமர்ந்தபடி படிக்கலாம் என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் கிடந்த நூலகத்துறையை தலைமைச்செயலகத்தை போல பரபரப்பாக இயங்க வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதற்குச் சரியான சான்று அண்ணா நூற்றாண்டு நூலகம். திண்டுக்கல் பூட்டுப் போட்டுப் பூட்டாதக் குறையாக இருந்த இந்த நூலகம், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில்தான் புதிய உயிரைப் பெற்றுள்ளது.

இந்நூலகம் சார்பாக கடந்த மாதம் கூட 'சென்னை இலக்கிய திருவிழா' என்ற மிகச் சிறப்பான நிகழ்வு ஒன்று அரங்கேறியது. அதுவரை இப்படியான ஒரு விழாவை தமிழ்நாடு கண்டதில்லை. கேரளாவிலிருந்து எழுத்தாளர் பால் சக்காரியா இதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவை முன்னெடுத்துச் செய்ததும் பள்ளிக்கல்வித்துறைதான்.
இப்போது அடுத்த அதிரடி ஆக்சனை தொடங்கி வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை. அமேசான் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கிண்டிலில் உள்ள 10 லட்சம் நூல்களை இனி அரசு பொதுநூலகங்களில் அமர்ந்தபடி படிக்கலாம் என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
கடந்த மாதம்தான் சர்வதேச புத்தகக் காட்சியை அரசு நடத்திமுடித்தது. ஏறக்குறைய இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக பலரும் இதனை பாராட்டி இருந்தனர். சர்வதேச பதிப்பகங்கள் இதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டிருந்தன.
தமிழ் புத்தகங்களை வெளிநாட்டு மொழிக்கு எடுத்துச் செல்ல மானியம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. அதேபோல், அயல்நாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க கூட மானிய தொகை அறிவிக்கப்பட்டது. ஆகவே, இந்த முயற்சி தமிழ்நாட்டில் முன்னோடியாகப் பேசப்பட்டது.

இப்போது அதன் தொடர்ச்சியாகத்தான் 'அமேசான் கிண்டில்' மூலம் பொது நூலகத்துறை வாசகர்கள் 10 லட்சம் புத்தகங்களை படிக்கக் கூடிய வசதியை உருவாக்கி தந்திருப்பது. ஆக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலாம்படை படிந்து கிடந்த நூலகத்துறையை மீட்டுக் கொடுத்து வருகிறார்.
இந்த அமேசான் கிண்டில் திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 500 பொதுநூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுத்தி தரப்பட உள்ளது. அதில் தற்போது முதல் கட்டமாக 140 பொதுநூலகங்களில் மின்நூலக சேவை தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கில், 10 ஆயிரம் புத்தகங்கள் கணினியில் பிடிஃஎப் வடிவில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான இ-பருவ இதழ்கள் கணினி டெஸ்க்டாப்பில் படிக்கக் கூடிய வசதியை உருவாக்கித் தந்துள்ளனர். tamilnadupubliclibraries.org என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து டிஜிட்டல் லைப்ரரரி மூலம் அமேசான் கிண்டில் பக்கத்திற்கான வசதியைப் பெறலாம். மின்னூலாக்கத்தில் magsters என்ற வாசிப்புத்தளமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில்தான் நாளேடுகள், மாத இதழ்கள் எனப் பலவற்றையும் நாம் படிக்கமுடியும்.
இதைப்போலவே சில வாரங்கள் முன்னதாக தமிழகத்திலேயே முதன்முறையாக 'நூலக நண்பர்கள்' திட்டம் தொடங்கப்பட்டது. இதனை, திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தில் 350 தன்னார்வலர்கள் சேர்ந்து செயல்பட உள்ளனர். அதற்கான அடையாள அட்டையை கூட அன்பில் மகேஷ் வழங்கினார். அப்போது அவர், "அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே நூலக நண்பர்கள் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்" என்று விளக்கிக் கூறினார்.
இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொருவரிடமும் 25 புத்தகங்கள் நூலகம் சார்பாக வழங்கப்படும். அந்தப் புத்தகங்கள் யார் யாருக்குத் தேவைப்படுகிறதோ அந்த உரிய வாசகர்களைக் கண்டறிந்து இவர்கள் கொண்டு போய் சேர்ப்பார்கள். இதன் மூலம் நேரடியாக வாசகர்களின் தேவையை இந்தத் தன்னார்வலர்கள் நேரடியாகக் கேட்டு அறிய முடியும்.
இதேபோல், திமுக அரசு புதியதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் துபாயில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் காட்சியில் பங்கேற்பதற்காக அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து அழைத்துச் சென்றார்.
அப்பயணத்தினை மேற்கொண்டு அனைத்து மாணவர்களும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முதன்முறையாக விமானப் பயணத்தை மேற்கொண்டவர்கள்.

ஆகவே, அந்த முயற்சி தமிழ்நாட்டைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் துபாய் நூலகத்திற்கு அன்பில் மகேஷ் ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.
அப்படித்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற அமைப்பைத் திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் குறிக்கோளாக, 'புத்தகம் படிக்கலாம், வெளிநாடு பறக்கலாம்' என்ற கொள்கை முழக்கம் முன்வைக்கப்பட்டது.
இன்னொரு தகவலையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு 'உங்கள் நூலகம் உங்கள் கையில்' என்ற செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். இச்செயலி மூலம் நூலகத்தின் செயல்பாடுகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் வாசகர்கள் தேடிப் பெறமுடியும். அதற்கு ஏற்ப அச்செயலி தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாகவே, அரசு தனது பள்ளி வகுப்பறைகளை எப்படி மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது முக்கியம். வாசிப்பு பழக்கத்தைத் தூண்டுவதற்காகப் பள்ளி அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வழக்கம் போல் இல்லாமல் மாற்றி அமைத்துள்ளது. அதாவது குறைந்தது 20 நிமிடங்களையாவது மாணவர்கள் நேரடியாக நூலகத்தில் செலவழிக்கவேண்டும். அதற்கான அட்டவணையைத்தான் அரசு புதியதாக மாற்றி அமைத்து சுற்றுக்குக் கொண்டுவந்துள்ளது.
ஒரு மாணவர் சரியாக படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்ணை வாங்க முடியும். அதன்மூலம் சில நன்மைகளைபெற முடியும். ஆனால் நூலகம் செல்லும் பழக்கத்தால் என்ன நன்மை? ஒரு மாணவர் தொடர்ந்து நூலகத்தைப் பயன்படுத்திவரும் வேளையில் நல்ல வாசிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அதன்வழியே தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்த முடியும்.
முறையான வாசிப்பு பழக்கத்தைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு என்று தனித்திறமையான போட்டிகளை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. அந்தப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் முறையான மதிப்பெண்களைப் பெற்றால், அம்மாணவர்களை அரசு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் துபாய் பயணத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வாரம் ஒரு புத்தகம் வழங்கப்படும். அதைப் படித்த பின்னர் என்ன உள்வாங்கினார்களோ அதை மாணவர்கள் கட்டுரை வடிவில் அதை விளக்கி எழுதவேண்டும். அல்லது அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் கொண்டு, ஒரு ஓவியத்தை வரைந்து வெளிப்படுத்தலாம்.

இவை இரண்டும் இல்லை என்றால், நாடக முறையில் கூட அக்கருத்துகளைச் சபையினர் முன் சமர்ப்பிக்கலாம். அந்த திறமையை ஆசிரியர்கள் கணக்கில் கொண்டு சில மதிப்பெண்களைப் போடுவார்கள். இப்படி இந்தப் போட்டியானது வட்டார அளவில் தொடங்கி, இறுதியாக மாநில அளவு வரை நடைபெறும். அதில் மாணவர்கள் பகுதி பகுதியாகத் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் வெற்றியாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே மாணவர்கள் வெளிநாட்டு அறிவை பயணம் மூலம் பெறுவது எவ்வளவு முக்கியமானது.
ஒரு பக்கம் மாணவர்களை நூலகத்திற்குச் செல்ல தயார் செய்கிறது அரசு. இன்னொரு பக்கம் பொதுநூலகங்களின் தரத்தை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. இப்படி சம அளவில் வேலைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. ஆகவேதான் குழந்தைகள், மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைத்து வாசகர்களும் பயன்பெறும் வகையில் பொதுநூலகங்களில் நவீனத் தொழில்நுட்ப வசதிகளை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு செய்து தந்துள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெளிவரும் நாளிதழ்களும், பருவ இதழ்களும், உடனுக்குடன் கிராமப்புற மாணவர்களைச் சென்றடையும் வகையில் மின்நூலக சேவை ஏற்படுத்தி தந்துள்ளது. தேசிய களஞ்சியம், பாடப்பொருட்கள், ஒலிப்புத்தகங்கள், குழந்தைகள் இலக்கியம், அறிவார்ந்த தேடுபொறி, திறந்த அணுகல் ஆராய்ச்சி இதழ்கள், புத்தக மதிப்புரை ஆகியவற்றையும் எளிதில் அணுகும் வசதியை உருவாக்கியுள்ளனர். இந்த வசதி மூலம் 323 தமிழ் பருவ இதழ்களும், 23 தமிழ் நாளிதழ்களையும் தேடிப் பயன்பெற முடியும்.

மின்நூலகத்தில் கல்வி, பொருளாதாரம், வணிகம், தொழில்,பயணம், சுற்றுலா என 40-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நூல்கள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்படும் மின்நூல்கள் பொது நூலக வாசகர்களுக்குக் கிடைக்கும். 5 ஆயிரத்திற்கும் மேலான இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் பருவ இதழ்களும் ,பிரபல பத்திரிகைகள் மற்றும் செய்தித் தாள்களும் கிடைக்கும். இதன் நீட்சியாகத்தா மின்நூலகத்தில் அதாவது அமேசான் கிண்டில் அன்லிமிட்டெட்டில் பதிப்பிக்கப்படும் 10 லட்சம் மின்நூல்களை நூலகங்களில் அணுக வசதி செய்து தரப்பட்டுள்ளது.
பொது நூலகங்களை நவீனமயமாக்கும் வகையில் மின் நூலக சேவை அறிமுகம் செய்து தந்துள்ளதுடன் இலவச Wifi இணைய வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்படுகிறது. சென்னை அசோக் நகரிலுள்ள அரசு பொது நூலகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் பயன்பெற விரும்புகின்றவர்கள் நூலகத்தில் https://i.airtel.in/wifi-setup1 என்ற தளத்திற்குச் சென்று air27018 Password ஐ பயன்படுத்தி நூல்களைப் படிக்கலாம்.
இந்தத் திட்டம் குறித்து எழுத்தாளர் பா.ராகவன் கூறுகையில், "இது ஒரு பெரிய முன்னெடுப்பு. அரசுக்கும் முதல்வருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். பொது நூலக வாசகர்கள் இதன் மூலம் பெறவிருக்கிற பலன் ஒரு புறம் என்றால், ராயல்டி சார்ந்த வருத்தங்கள் மிகுந்த தமிழ் எழுத்தாளர் சமூகத்துக்கு இந்தப் புதிய ஏற்பாடு பெரும் திறப்பாக இருக்கும்.
மாநிலமெங்கும் ஒவ்வொரு வாசகரும் படித்து முடிக்கும் ஒவ்வொரு பக்கமும் ராயல்டியாக மாறுவதை மிக நேரடியாக இனி காணலாம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்துப் பொது நூலகத் துறை இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது என்று தெரியவில்லை. அநேகமாகத் தமிழ்நாடே இதில் முன்னோடி" என்கிறார்.
எழுத்தாளர் என்.சொக்கன் கூறும்போது, "அமோசான் கிண்டிலில் முன்பே 10 லட்சம் நூல்கள் உள்ளன. தமிழ் மொழி உட்பட பல மொழிகளில் உள்ளன. அதைத்தான் மாதம் 169 ரூபாய் சந்தாவைச் செலுத்தி யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இது அன்லிமிடெட். இந்த வசதியைத்தான் பொதுநூலக வாசகர்களும் படிக்க முடியும். அதற்கான சந்தாவைத் தமிழ்நாடு அரசு செலுத்திவிடும் என நினைக்கிறேன். இல்லையெனில் அரசுக்கு வேறு ஏதேனும் திட்டம் மூலம் இதை அமேசான் கொடுக்கலாம்.
பொதுவாக ஒரு புத்தகம் அச்சில் வந்தால் அது நூலகத்திற்கு வந்துசேர குறைந்தது ஒருவருடம் ஆகும். ஆனால், கிண்டிலில் அதைவிட வேகமாக வந்துவிடும். ஏனென்றால், அதை உடனடியாக பதிப்பகங்கள் அமேசானின் வெளியிட்டு விடுகிறார்கள். அப்படி என்றால் இது சிறப்பான திட்டம். தமிழ்நாடு நூலகங்களில் நடந்துள்ள மாபெரும் பாய்ச்சல் இது. தொழில்நுட்ப புரட்சி இது. ஆகவே தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications