ஜீபூம்பா! சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை.. இனி மெட்ரோ போல் மாறுகிறது!
சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விஷயங்களில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய முக்கிய வழித்தடங்கள் இருக்கின்றன. இவற்றில் சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடம் அமைந்துள்ளது.

இந்த வழித்தடமானது பறக்கும் ரயில் திட்டம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பறக்கும் ரயில் என்றால் மேம்பாலத்தில் ரயில்கள் இயங்குவதாகும். கடற்கரை- வேளச்சேரி வரை தற்போது தினசரி 80-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன.
சென்னை கடற்கரை டூ வேளச்சேரி இடையே மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. ரயில் நிலையங்களில் 1 முதல் 4 தடங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது இந்த ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு 20,44,400 சதுர மீட்டர் அளவில் இடங்கள் உள்ளன.
சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்தி தமிழக அரசு மூலம் இந்த ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது. ரயில் இயக்கம் முதல் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மெட்ரோ ரயில் சேவைக்கு இணையாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் 1997ஆம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை- மயிலாப்பூர் வரை முதற்கட்டமாக தொடங்கப்பட்டது. இதற்கு பயணிகள் இடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து அடுத்த கட்டத்திற்கு ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகிறார்கள். மேலும் குப்பை கூளங்களும் ஆங்காங்கே காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அது போல் ரயில் நிலையத்தின் தூய்மை என்பது இல்லாமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் இவற்றை தமிழக அரசு எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்றினால் நல்லதொரு சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications