சென்னை, திருச்சி விமான நிலையத்தை தனியார்மயமாக்கலா.. மத்திய அரசிடம் மல்லுக்கட்டும் தமிழக அரசு
சென்னை: மத்திய அரசின் பொருளாதார சீரமைப்புத் திட்டத்தின்படி சென்னை அல்லது திருச்சி விமான நிலையங்களை தனியார்மயமாக்கலை தமிழக அரசு கண்டித்துள்ளது.
4 ஆண்டு காலத்துக்குள் ரூ. 6 லட்சம் கோடியை திரட்டும் மத்திய அரசின் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு (National Monetisation Pipeline) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் சான்றாகவே இந்த திட்டத்தை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
42 ஆயிரம் கி.மீ. தொலைவிலான மின்வழித் தடங்கள், பிஎஸ்என்எல் நிறுவனங்கள், விமான நிலையங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளைத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகள்
70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சொத்துகளை ஏழு ஆண்டுகளில் பாஜக அரசு அழித்து வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மேலும் மத்திய அரசுக்கு சாதகமாக உள்ள 3 தொழிலதிபர்களுக்கு மட்டுமே இந்த குத்தகை அளிக்கப்படுகிறது என்பதையும் அவர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் சென்னை அல்லது திருச்சி விமான நிலையத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

திருச்சி அல்லது சென்னை விமான நிலையம்
இதை தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திருச்சி அல்லது சென்னை விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். இதுகுறித்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த போகிறோம். ஒரு திட்டத்தையோ நடவடிக்கையையோ எடுக்கும் முன்னர் யாரிடமும் மத்திய அரசு ஆலோசனை நடத்த விரும்பவில்லை.

ஒரே நாடு ஒரே வரி
எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் அதை குழுவுக்கு அனுப்புவது, அதன் மீது விவாதம் நடத்துவது எதையும் சட்டமாக்குவதற்கு முன் நெகிழ்வுத் தன்மை உள்ளிட்டவை கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதலை மிகவும் பொருத்தமான விஷயமாக நான் பார்க்கிறேன். மத்திய அரசு கூறும் ஒரே நாடு ஒரே வரி என்ற கருத்து முரண்பாடாகவே இருக்கிறது.

நாடு முழுவதும் ஒரே கொள்கை
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கையை ஒரே மாதிரியாக மாற்ற முடியும் என மத்திய அரசு நினைத்தால் அதுவும் முரணாக இருக்கிறது. மாநிலங்கள் முழுவதும் மொழி, கலாச்சார ரீதியாக மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் அடைந்துள்ளன. எனவே மாநிலங்கள் முழுவதும் ஒரே கொள்கை என்பது சரிவராது. இதற்கு உதாரணம் இந்தி பேசும் ஏழை மாநிலங்களை விட டாக்டர் = நோயாளி விகிதம் தமிழகத்தில் 7 மடங்கு அதிகம் என்றார்.

கைவிடக் கோரிக்கை
மத்திய அரசின் பொருளாதார சீரமைப்பு கொள்கையை கைவிடக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு போதிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை கைவிடுமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார். இந்த திட்டம் மூலம் விலைமதிப்பில்லாத அரசு சொத்துகளை ஒரு சில பெரு நிறுவனங்களுக்கு செல்ல மட்டுமே வழிவகுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீண்ட கால குத்தகைக்கு விடுதல் என்பது எப்படி தனியார்மயமாதல் ஆகும் என மத்திய அரசு கேள்வி எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications