மெசேஜ் அனுப்பி இருக்கோம்.. கிசுகிசுத்த தலைகள்.. பாய்ந்து வந்த திமுக.. டெல்லி வரை போகும் பஞ்சாயத்து!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் தரப்பு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது பற்றிய பஞ்சாயத்து ஏற்கனவே டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. நீட் விவகாரம் இதனால் உச்சம் அடைந்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்தார். வழக்கமாக கொடுக்கப்படும் இந்த விருந்தில் நேற்று ஆளும் திமுக கலந்து கொள்ளவில்லை.
மாறாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விருந்தில் கலந்து கொண்டன.

ஆளுநர் மாளிகை
நேற்று ஆளுநர் மாளிகையில் சந்தித்துக்கொண்ட அதிமுக, பாஜக தலைவர்கள் அருகருகே அமர்ந்து நெருக்கமாக பேசிக்கொண்டனர். அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இல்லை என்றாலும் பல்வேறு விவகாரங்களில் நட்பாகவே இருக்கின்றன. அதன்படியே நேற்று பாஜக மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணி எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

கிசுகிசுப்பு
அப்போது எதிர்க்கட்சி கொறடா எஸ்பி வேலுமணியுடன் தனியாக சில நிமிடங்கள் மத்திய இணை அமைச்சர் முருகன் காதுக்கு அருகே சென்று கிசுகிசுத்தபடி பேசினார். அதேபோல் பாஜக நிர்வாகிகளுடன் அதிமுக நிர்வாகிகள் சிலர் தனி தனியாக கிசுகிசுத்தபடி பேசினர். பெரும்பாலும் இந்த நிகழ்வில் ஆளும் திமுக கூட்டணி விருந்தை புறக்கணித்தது பற்றித்தான் பேசப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு அரசியல் பற்றியும், பாஜக - அதிமுக இடையிலான உறவு பற்றியும் அதிமுக, பாஜக தலைகள் பேசி இருக்கின்றன.

திமுக விளக்கம்
இந்த நிலையில்தான் திமுக தரப்போ தங்களின் முடிவு சரிதான் என்று வாதம் வைத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அறிவாலய வட்டாரங்கள், திமுக செய்ததில் தவறு இல்லை. ஆளும் கட்சி என்ற முறையில் வலுவான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். நாங்கள் அனுப்பும் மசோதாக்களை ஏற்பதே ஆளுநரின் வேலை. ஆனால் மக்களால் தேர்வு செய்த அரசை அவர்கள் மதிக்கவில்லை. அதனால் ஆளுநருக்கு இந்த எதிர்ப்பை காட்டி இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

திமுக சரவணன்
திமுக சரவணன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலோ, நாங்கள் அந்த நிகழ்வை புறக்கணித்தது என்பது ஒரு மெசேஜ். ஆளுநரின் செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் மெசேஜ் இது. தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் எதுவும் நீட் மசோதாவை ஆதரிக்கவில்லை. ஆளுநர் குறைந்தபட்சம் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். அதை கூட அவர் செய்யாதது தவறு. அவருக்கு எதிரான மெசேஜை நாங்கள் எங்கள் எதிர் நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி பஞ்சாயத்து
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் தரப்பு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது பற்றிய பஞ்சாயத்து ஏற்கனவே டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜகவில் உள்ள சிலர் மூலம் இந்த தகவல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசைக்கு நேர்ந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்க தொடங்கி உள்ளது. இதை வளர விட கூடாது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று டெல்லிக்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications