"சென்னையில் ரூ.12,500 நிவாரணம்!" வந்த புது அறிவிப்பு! எண்ணூர் எண்ணெய் கசிவு விபத்தில் அரசு அறிவிப்பு
சென்னை: சென்னை புயல் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எண்ணூரில் எண்ணெய் கழிவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இதற்கான நிவாரணம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் ருத்திர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது.

சுமார் 2 நாட்கள் இந்த கனமழை கொட்டி தீர்த்த நிலையில், சென்னையில் அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் தேங்கியது. முக்கிய இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் மற்ற இடங்களில் வெள்ளம் வடியப் பல நாட்கள் ஆனது.
இந்த வெள்ளத்தால் கனமழை கொட்டிய நிலையில், சென்னை எண்ணூரில் உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த எண்ணெய் கசிவு கடற்கரையில் பல கிமீ தூரத்திற்குப் பரவியது. இந்த எண்ணெய்யை அகற்றும் பணிகள் இப்போது படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்,
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் சந்திப்பில் அவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, திருவொற்றியூர் மண்டல புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு அதிகாரி கந்தசாமி நிவாரணத்தை அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழை மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிவாரண தொகையை வழங்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குக் கூடுதலாக தலா 12,500 ரூபாயும் படகுகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் அரசு முடிவெடுத்துள்ளது.
இப்போது 12,500 ரூபாய் வழங்கக் கணக்கெடுக்கும் பணிகள் முடிந்துவிட்டது. வங்கி தகவல்களைச் சேகரித்து வருகிறோம். அந்த பணிகள் முடிந்த பிறகு இந்த கூடுதல் தொகை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்கனவே 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் அது தனி. அதுபோக இவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இங்குள்ள மக்களின் நிரந்தர வாழ்வாதாரத்தை மீட்கும் வகையிலும் இங்கு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலில் மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டோர் வாழ்வாதாரம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுப் பணி வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications