தமிழக அரசு மருத்துவர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!
சென்னை: தமிழக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வந்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டபோதும் நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துகிறது என்பது அரசு மருத்துவர்களின் புகார்.

ஆகையால் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் நடத்தி வந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அரசுத் தரப்பிலும் மருத்துவர் சங்க பிரதிநிதிகளுட ன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் பணிமுறிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அத்துடன் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும் அரசு கெடு விதித்தது.
இந்நிலையில் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்துள்ளார், தங்களை கடவுளுக்கு இணையாக பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை தாங்கள் ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications