பெண்களுக்கு மாதம் ரூ. 1000.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.! உரிமை தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை திட்டத்திற்கான அரசாணையை இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக முன்வைத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை என்பதாகும். இதற்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

திமுக ஆட்சி அமைந்தது முதலே பல எதிர்க்கட்சிகள் இந்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கிடையே இந்தாண்டு பட்ஜெட்டில் இது தொடர்பாக அறிவிப்பைத் தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து நேற்று முன்தினம் கலெக்டர்கள் உடன் முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். அதில் இந்தத் திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தகுதியான பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தில் கீழ் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து இத்திட்டத்தில் யார் எல்லாம் வருவார்கள், யார் எல்லாம் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியானது. அதன் பின்னர், இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவமும் கூட வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 13 வகையான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் அந்த விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் உரிமை தொகை திட்டத்திற்கு அரசாணையைத் தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது. திட்டச் செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 7000 கோடி நிர்வாக அனுமதி வழங்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications