ஊரக உள்ளாட்சி தேர்தல்.. விஸ்வரூப வெற்றியை நோக்கி திமுக.. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வி
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் தற்போது வரை பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே முன்னிலையில் உள்ளன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.
உச்ச நீதிமன்ற கண்டிப்பிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
அதன்படி விடுபட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மேலும், பிற மாவட்டங்களில் காலியாக இருந்த பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலும் அப்போது நடைபெற்றது.

வாக்குப்பதிவு
முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகளும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 78.47% வாக்குகளும் பதிவாகியிருந்தன. அதேபோல இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 70.51% வாக்குகள் பதிவாகி இருந்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 12ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திமுக முன்னிலை
நள்ளிரவைத் தாண்டியும் நடைபெற்று வந்த எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே முன்னிலையில் உள்ளன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. அதேபோல இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவும் மோசமான ஒரு தோல்வியையே சந்தித்துள்ளது.

எத்தனை இடங்கள்
காலை முதல் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். 140 மாவட்ட கவுன்சிலர்கள் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தற்போது வரை வெளியான முடிவுகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 99 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக கூட்டணி வெறும் 5 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்துள்ளன. அதேபோல தனித்துக் களமிறங்கிய பாமகவாலும் ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.

ஒன்றிய கவுன்சிலர்
அதேபோல 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் தற்போது வரை வெளியான 701 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 531 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக கூட்டணி 90 இடங்கள் மற்றும் பாமக 27 இடங்களை மட்டுமே தன்வசப்படுத்தியுள்ளன. மேலும், இதர கட்சிகள் 49 இடங்களையும் அமமுக 3 இடங்களிலும் தேமுதிக ஒரு இடத்தையும் கைப்பற்ற முடிந்தது.

விஸ்வரூப வெற்றி
வெறும் 6 மாதங்களுக்கு முன் ஆளும் கட்சியாக இருந்து 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல முடிந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. ஏற்கனவே, அதிமுகவில் தலைமை சரியில்லை என்ற பேச்சு அடிப்பட்டு வரும் நிலையில், இது அக்கட்சியை சங்கடமான ஒரு சூழலுக்குத் தள்ளியுள்ளது. அதேபோல சசிகலாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இது நல்ல ஒரு பூஸ்டாகவே அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் படுதோல்வி
சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த திமுக, இந்த வெற்றியை தங்கள் நல்லாட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்றே கூறுகின்றனர். மேலும், இன்னும் பல இடங்களில் முடிவுகள் வரவில்லை என்றும் முழுமையான முடிவுகள் வரும் போது, திமுக இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது தெரியும் என்றும் அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி திமுகவினருக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எனவே, இதே வேகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தி முடிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications