ஜெயலலிதாவை அறிமுகம் செய்து தமிழகத்தை நாசமாக்கியதில் எனக்கு பங்குள்ளது: கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்
சென்னை: ஜெயலலலிதா எனும் ராட்சசியை அறிமுகம் செய்து தமிழகத்தை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு என தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது: கருணாநிதி போன்ற பெருந்தலைவர்கள் உள்ள தமிழ்நாட்டில் அந்த ராட்சசியை (ஜெயலலிதா) இந்த தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தி இந்த நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்குண்டு. நல்லா இருந்த நாட்டை நாசமாக்கியதிலே எனக்கும் ஒரு பங்குண்டு.
இந்த நாடு ஒரு 10 ஆண்டுகாலம் குட்டிச் சுவரானது.. அதற்கும் காரணம் நாங்கள்தான். அந்தம்மா ஹைதராபாத்துக்கு போறேன்னு கிளம்பிருச்சு. அப்ப நடராஜன் (சசிகலா கணவர்) எங்களுக்கு போன் செய்து சொல்கிறார்.. அந்த அம்மா ஹைதராபாத்துக்கு போகுது.. போய் தடுத்து நிறுத்துங்க என்றார் நடராஜன். நானும் திருநாவுக்கரசரும் ரெண்டுபேரும்தான் கைலியோட ஓடுகிறோம்.. கைலியோட ஓடிப் போய் அம்மா, நீ ஹைதராபாத் போயிடாத.. இந்த நாட்டை காப்பாத்த உன்னைவிட்டா ஆளு இல்லைன்னு நாங்க செய்த பாவத்தை இந்த நாடு 10 ஆண்டுகாலம் அனுபவிச்சது.
அதை எல்லாம் மாற்றி கருணாநிதி, இன்று மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த ஆட்சியை பார்போற்றுகிற ஆட்சியை இன்றைக்கு நமக்கு கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

அதென்ன ஜெயலலிதாவின் திராட்சை தோட்ட விவகாரம்?
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக ஜானகி அணி, அதிமுக ஜெயலலிதா அணி என பிளவுபட்டது. அப்போது நடந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. 1989-ம் ஆண்டு தமிழக முதல்வராக மீண்டும் கருணாநிதி பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் தமக்கு அரசியலே வேண்டாம் என முடிவெடுக்கிறார் ஜெயலலிதா.
இதனையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை எழுதிய ஜெயலலிதா, அதனை தமது கார் ஓட்டுநரிடம் கொடுத்துவிடுகிறார். பத்திரிகையாளர்களிடமும் சபாநாயகரிடம் இந்த ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஜெயலலிதா உத்தரவு. ஆனால் மறுநாள் பத்திரிகைகளில் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதம் தொடர்பான எந்த செய்தியும் வரவில்லை.

அப்போது, அசைன்மெண்ட் கொடுக்கப்பட்ட ஓட்டுநரை அழைத்து விசாரிக்கிறார் ஜெயலலிதா. தாம் கடிதத்தை எடுத்து சென்ற போது, சிலர் என்னை தாக்கி கடிதத்தை பறித்துக் கொண்டனர் என்கிறார். அப்போது ஜெயலலிதாவின் சந்தேகம் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது ஏற்பட்டது. தமது வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை நடராஜன் உளவு ஆட்கள் மூலம் கண்காணிக்கிறார் என்பதை ஜெயலலிதா புரிந்து கொண்டார்.
ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதங்களை பறித்து பதுக்கி வைத்தவர் சசிகலா நடராஜன். அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் என்ற இன்றைய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், இன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவின் தளபதிகளாக இருந்தனர். அதனால் இருவரையும் நடராஜன் அழைத்து, ஜெயலலிதா அரசியலை விட்டு விலகி ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் குடியேற முடிவு செய்துவிட்டார் என கூறுகிறார். அன்று நடராஜன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதா, அரசியலைவிட்டு வெளியேறாமல் ஹைதராபாத்துக்கு குடிபோகாமல் தடுத்தனர் சாத்தூர் ராமச்சந்திரனும் திருநாவுக்கரசரும். இதனைத்தான் இன்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அன்று நடராஜன் உள்ளிட்டோர் தடுக்காமல் இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஜெயலலிதா எனும் ஆளுமையின் சகாப்தமே இருந்திருக்காது என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications