ஜெருசலேம் அல்அக்ஸா பள்ளிவாசல் மீது தாக்குதல்... இஸ்ரேலுக்கு த.மு.மு.க. கடும் கண்டனம்..!
சென்னை: ஜெருசலேத்தில் உள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

முஸ்லீம்கள்
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதப் பள்ளிவாசலான ஜெருசலேம் அல்அக்ஸா பள்ளிவாசல் மீது பயங்கரவாத இஸ்ரேலின் காவல்துறை கடந்த 7.5.2021 வெள்ளி அன்று காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து 170 பாலஸ்தீனர்களைப் படுகாயப்படுத்தியதோடு, மூன்று பேரைப் படுகொலையும் செய்துள்ளது. இஸ்ரேலின் இந்த ஈனத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

குத்ஸ் தினம்
புனித ரமலானின் கடைசி வெள்ளிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவான குத்ஸ் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலைத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன ஆதரவு தினத்தைக் கடைப்பிடித்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் மீது பயங்கரவாத இஸ்ரேலின் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதோடு, புனித அல்அக்ஸா பள்ளிவாசலையும் சேதப்படுத்தியுள்ளனர்.

பாலஸ்தீனர்கள்
பாலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் இஸ்ரேலிய அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஒரு தேசத்தின் குடிமக்களை தாக்குதல் நடத்தி வெளியேற்றுவது போர்க்குற்றம் என்ற ஐ.நா.சபையின் எச்சரிக்கைகளை மீறி, மண்ணின் மைந்தர்கள் மீது சியோனிச பயங்கரவாத இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது.

வலியுறுத்தல்
இதை இந்தியா வன்மையாகக் கண்டிக்க வேண்டும். உலக நாடுகள் அனைத்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமது ஆதரவுக் கரத்தை நீட்ட வேண்டும். இவ்வாறு த.மு.மு.க. தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications