"கமிஷன், மிரட்டல், அராஜகங்கள்.. திமுக ஆட்சியில் பொதுமக்கள் அச்சம்!" கொந்தளித்த சசிகலா சுளீர் அட்டாக்
சென்னை: திமுக ஆட்சியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா கடுமையாகச் சாடியுள்ளார்.
சசிகலா இப்போது தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பம்.
இதனிடையே திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, திமுக ஆட்சியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் சாடியுள்ளார்.

சசிகலா
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் புரட்சிப் பயணம் மேற்கொண்டபோது கூட திமுகவினரின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருந்தேன். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுகவைச் சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகத் திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

அச்சம்
இதனைப் பார்த்து தமிழக மக்களும், தமிழகத்தை நம்பி தொழில் செய்துகொண்டு இருக்கும் தொழில் நிறுவனத்தினரும் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள். அதேபோல், தென்காசி மாவட்டம், பெருமாள்ட்டி பஞ்சாயத்துத் தலைவர் குருவம்மாளின் கணவர் காளிராஜ், வேலாயுதபுரத்தில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியரிடம் மிரட்டல் விடுக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அனைவராலும் பார்க்க முடிந்தது.

கமிஷன்
அதாவது, பஞ்சாயத்து விவகாரத்தில் எஸ்பி, ஆர்டிஓ என யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு எல்லாம் நாங்கள் தான் என்றும், கட்டுமானப் பணிகள் தொடர எங்கள் கையெழுத்து முக்கியம் எனவும் மிரட்டுகிறார். அதேபோன்று மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் என்பவர் ஒப்பந்ததாரர்களிடம் தனக்கு கமிஷன் தர வேண்டும் என்று மிகவும் ஆதங்கப்பட்டுப் பேசுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் நாடே பார்க்கிறது.

அராஜகங்கள்
அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் என்று தெளிவாகக் குறிப்பிட்டு, பில் வந்தவுடன் தனக்கு 3 சதவீதம் கமிஷன் கொடுத்துவிட வேண்டும், இல்லையென்றால் நான் கையெழுத்துப் போட முடியாது என்று மிகவும் கறாராகப் பேசுகிறார். இதேபோன்று திமுகவினரின் அத்துமீறல்கள் பொதுவெளியில் வெளிச்சத்திற்கு வந்தது மட்டும்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் பொதுவெளிக்கு வராமல், அன்றாடம் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் திமுகவினரின் எண்ணிலடங்கா அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.

ஜெயலலிதா இல்லாததால்
ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாததால், திமுகவினரைச் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக மக்கள் அமர வைத்துள்ளார்கள். ஆனால் திமுகவினரோ, தமிழகத்தை ஏதோ இவர்களுக்கே பட்டயம் எழுதிக் கொடுத்தது போல் நினைத்துக் கொண்டு செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

மீண்டும் இந்த தவறை செய்ய மாட்டார்கள்
இதுபோல திமுகவினர் செய்கின்ற மக்கள் விரோத செயல்களை, ஆட்சியாளர்கள் தடுக்கவில்லை என்றால், அது தமிழகத்தையும், தமிழக மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதை இந்த ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவற்றை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications