தமிழகத்தில் நாசவேலைக்கு சதி?.. புழல் சிறையில் 3 முக்கிய தீவிரவாதிகளிடம் விசாரணை
சென்னை: தமிழகத்தில் நாசவேலை நடத்த சதி திட்டம் தீட்ட உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புழல் சிறையில் உள்ள 3 தீவிரவாதிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
உலக நாடுகளை இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய செய்தது. இந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

தாக்குதல் சம்பவம்
இந்த நிலையில் தற்கொலை படையின் தலைவன் சஹ்ரான் பின் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தற்கொலை படையினர் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு அது நடக்க முடியாததால் இலங்கையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியது.

குண்டுவெடிப்பு
இலங்கை தாக்குதல் குறித்து இந்தியா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தும் அதை இலங்கை சட்டை செய்யவில்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

தேசிய புலனாய்வு அமைப்பு
இந்த நிலையில் பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த தானுகா ரோஷன் உள்பட 3 பேர் கைதாகினர். தானுகா இலங்கையில் இருந்து கள்ளத் தோணியில் தமிழகம் வந்தவர். இதைத் தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.

விசாரணை
புழல் சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. அண்மையில் கோவையில் சிக்கிய பயங்கரவாதி அசாருதீன், புழல் சிறையில் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோரை பார்த்தாரா, இந்த மூவருக்கும் அசாருதீனுக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications