மேற்கூரை இடிந்து விழுந்தது: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கட்டிடம் தகுதிமிக்கதா? அதிகாரிகள் விளக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கட்டிடம் பொதுமக்கள் பயன்படுத்த தகுதி வாய்ந்ததாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து அங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர். கட்டிட விபத்தில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சென்னைக்கு மிக அருகில் உள்ள மாவட்டமான செங்கல்பட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

மேற்கூரை இடிந்து விழுந்தது
இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள தாய்சேய் நல பிரிவில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரது மனைவி லோகேஸ்வரியின் படுக்கை மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரும் அதிர்ச்சி
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் நல்லவேளையாக தாயும், சேயும் உயிர்தப்பினார்கள். தொடர்ந்து அந்த வார்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறு வார்டிற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் மாற்றினர். மருத்துவ மனையில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அங்குள்ள நோயாளிகள் மட்டுமின்றி பொதுமக்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த செய்தி தொலைக்காட்சிகளில் செய்திகள் தொடர்ந்து வெளியாயின.

கலெக்டர் உத்தரவு
சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தின் பூச்சுகள் தொட்டாலே உதிர்ந்து விழும் நிலையில் இருப்பதாக பரபரப்பான விவகாரம் போய் கொண்டிருக்கிறது. இதேபோல் மருத்துவமனையின் கட்டிடமும் இருப்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு
அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேற்கூரை பெயர்ந்து விழுந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இந்த மருத்துவமனை கட்டிடம் கடந்த 1977 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த விபத்தில் மருத்துவ பணியாளர்களுக்கோ அல்லது நோயாளிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தகுதி வாய்ந்த கட்டிடம்
மருத்துவமனையின் மேற்கூரையின் புறபூச்சு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் புனரமைக்க அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மருத்துவமனை கட்டிடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தகுதி வாய்ந்ததாக உள்ளதாக மாவட்ட கலெக்டருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கட்டிட மேற்கூரை மட்டும் நோயாளிகள் யாரேனும் மீது விழுந்து இருந்தால் பெரும் உயிர் சேதம் எற்பட்டு இருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. இதுபோன்ற பழைய கட்டிடங்கள் ஆண்டுகள் செல்லச்செல்ல செயலிழந்து வரும். இதனால் பழைய கட்டிடங்கள் கொண்ட மருத்துவமனைகளை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அப்படி கட்டிடம் பலவீனமாக இருந்தால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications