விநோதம்.. ஒரே சாலை.. ஒரு புறம் திறக்கப்பட்ட கடைகள்.. மறுபுறம் மூடப்பட்ட கடைகள்.. ஓ இது தான் காரணமா!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது,
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது,
அதேநேரம் குறிப்பிட தகுந்த அளவு மக்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதால் இந்த முறை மருத்துவ உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஏற்கனவே தினசரி பாதிப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கொரோனா உறுதி செய்யப்படுபவர்களில் லேசான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனர். தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படும் நபர்கள் மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுகின்றனர். மாநிலத்தில் கொரோனா படுக்கைகள் போதுமான அளவு உள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,

தமிழகத்தில் ஊரடங்கு
திடீரென பரவ தொடங்கியுள்ள கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவு 10 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் விரைவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதுவையில் கட்டுப்பாடுகள் இல்லை
அதேநேரம் தமிழகத்தையொட்டி அமைந்துள்ள புதுச்சேரியில் இதுபோன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், புதுச்சேரியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் புதுச்சேரி நோக்கிப் படையெடுத்தனர். அப்போது சமூக இடைவெளி, மாஸ்க் இல்லாமல் ஒரே இடத்தில் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகக் குவிந்திருந்தது பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

எல்லை
புத்தாண்டு தினத்திற்குப் பின்னர் புதுச்சேரியில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. இருந்தாலும் கூட அங்கு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எல்லையில் தமிழகப் பகுதிகளும், புதுச்சேரி பகுதிகளும் மாறி மாறி அமைந்துள்ளன. குறிப்பாகப் புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தமிழக கிராமங்கள் அமைந்துள்ளன.

கடைகள்
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் அமலில் இருந்த ஞாயிறு ஊரடங்கால் எல்லையில் தமிழகப் பகுதியில் அமைந்திருந்த கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதுச்சேரி பகுதியில் அமைந்திருந்த கடைகள் வழக்கம் போலத் திறக்கப்பட்டன. குறிப்பாகப் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள சித்தலம்பட்டு திருக்கனூரில் ஒரே பகுதியில் தமிழகப் பகுதியில் அமைந்திருந்த கடைகள் மூடப்பட்டும், புதுச்சேரி பகுதியில் அமைந்திருந்த கடைகள் திறக்கப்பட்டும் இருந்தன.

எல்லை போக்குவரத்து
அதேபோல தமிழக - புதுவை எல்லையில் போக்குவரத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. புதுவையில் இருந்து தமிழகம் வரும் அரசு மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கமாகப் பரபரப்புடன் காணப்படும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.












Click it and Unblock the Notifications