2015ல் வந்ததை விட அதிகம்.. பூண்டி நீர்தேக்கம் பற்றி வெதர்மேன் வார்னிங்.. திறக்கப்படும் 35,000 கனஅடி!
சென்னை: பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகமாகிக்கொண்டு இருப்பதால் நீர் தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை 4 மணிக்கு கரையை கடந்தது. சென்னைக்கும் புதுச்சேரிக்கு இடையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது சென்னையிலும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இதையடுத்து பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி நீர் தேக்கம்
பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகமாகிக்கொண்டு இருப்பதால் நீர் தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மொத்த உயரம்
நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். தற்போது நீர் இருப்பு 34.21 அடியாகவும், கொள்ளளவு 2888 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்து 42,420 கன அடியாக உள்ளதாலும். அம்மாபள்ளி அணையிலிருந்து உபரி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாலும் அந்த உபரி நீர் கூடுதலாக அணைக்கு வந்து சேரும் என்பதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதலாக விநாடிக்கு 35,000 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக உயர்த்தி திறக்கப்படும். எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், பூண்டிக்கு தற்போது நீர்வரத்து 42760 கனஅடியாக இருப்பதால் நீர் வெளியேற்றும் அளவு 35000 கனஅடியாக அதிகரிக்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் தற்போதைய மட்டம் 35.00 அடியில் இருந்து 34.14 அடியாக உள்ளது. இது மேலும் வெளியீடு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இது, 2015ல் பூண்டிக்கு வந்த நீர் வரத்தை விட இதுதான் மிக அதிகம் என்று வெதர்மேன் பிரதீப் ஜானும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications