தமிழகத்தில் நீடிக்கும் கொரோனா தொற்று- ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு; 66 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5,489 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவால் 66 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,53,027. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 55,09,615. இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,01,841.
கொரோனாவை விடுங்க.. பாஜகவே மிகப் பெரிய தொற்றுநோய்தான்.. மம்தா கடும் தாக்கு
தமிழகம் 4-வது இடம்
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மொத்தம் 5,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,64,092 ஆகும்.
ஒரே நாளில் 66 பேர் மரணம்
கொரோனவால் இன்று ஒரேநாளில் மொத்தம் 66 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிகை 9,784 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் கொரோனா மரணங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது.
சென்னை பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் சென்னையில் இன்று மட்டும் 1348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிற மாவட்டங்களைப் பொறுத்தவரையில் கோவையில் அதிகபட்சமாக 474; செங்கல்பட்டில் 381; சேலத்தில் 357; தஞ்சாவூரில் 242 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்கள்
சென்னையில் 12 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் மரணமடைந்திருக்கின்றனர். சென்னையில் இன்று ஒரேநாளில் 1374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக 306 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.