தமிழகத்தில் பிளஸ்1 வகுப்புக்கு இன்று முதல் மாணவர் சேர்க்கை - கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை
தமிழ்நாட்டில் அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை இன்று தொடங்குகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் மேல்நிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. வாழ்க்கையின் அடுத்த படியில் அடி எடுத்து வைக்கப் போகும் மாணவர்கள் தங்களுக்கு சரியான குரூப்பை தேர்வு செய்து படிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் தேர்வு செய்யும் குரூப் அடிப்படையில் உயர் கல்விக்கான கல்லூரி படிப்புகளையும் தேர்வு செய்ய முடியும் என்பதால் மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்து படிப்பது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் போடப்பட்டது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி தோல்வியடைந்தவர்கள், தேர்வு எழுதாதவர்களுக்கு மறு தேர்வும் முடிந்து விட்டது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி தேர்வு முடிவு வெளியானது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்தகட்டமாக பிளஸ்1 வகுப்பில் சேருவதற்கான சேர்க்கை ஆகஸ்ட் 24 முதல் தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
அனைத்து பள்ளிகளிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு வரும் போது மாற்றுச்சான்றிதழ் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மாணவர் சேர்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர் சேர்க்கையின் போது எதற்காகவும் மறுக்கக் கூடாது இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 17ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிசன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமும், தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்படத்தக்கது.












Click it and Unblock the Notifications