சந்திரயான்: மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா, வீரமுத்துவேல் - பெருமித தமிழர்கள்!
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக சந்திரயான் -3 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.
சந்திரயான் .. நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளில்லா விண்கலம். சந்திரயான் -1 முதன் முதலில் 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சந்திரயான் -1 நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து உலகுக்கு அறிவித்தது. 2019-ம் ஆண்டு ஜூலை 22-ல் சந்திரயான் -2 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. சந்திரயான் -2 வெற்றி பெறாமல் போனாலும் இந்தியாவின் முயற்சிகளை கண்டு சர்வதேசமே அதிர்ந்து போய் புகழ்ந்தது. இதன் வரிசையில்தான் தற்போது சந்திரயான்-3 நாளை விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் மைல் கற்களாக சந்திரயான் விண்கலங்கள் பார்க்கப்படுகிறது. இந்த சரித்திரம் பேசும் சாதனையில் தமிழ்நாட்டு தமிழர்கள் பிரதான பங்களிப்பை செய்திருப்பது தமிழர் நமக்கு பெருமையும் பெருமிதமும்தான். அறிவியல் உலகில் சரித்திரம் படைக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள் இவர்கள்தான்.
மயில்சாமி அண்ணாதுரை: தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 1958-ல் பிறந்தவர். 11-ம் வகுப்பு வரை தாய்மொழி தமிழ் வழியில்தான் கல்வி கற்றார். 1980-ல் பொறியியல் பட்டம் பெற்ற மயில்சாமி அண்ணாதுரை பொறியியல் படிப்பில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றார். பின்னர் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் இணைந்தார். 1994-ல் இன்சாட் 2சி செயற்கை கோள் திட்டத்தின் துணை இயக்குநராக பணியாற்றினார். 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இயக்குநராக பணி உயர்வு பெற்றார். இந்திய அறிவியல் துறையின் புதிய யுகமான சந்திரயான் -1, சந்திரயான் -2, மங்கள்யான் திட்டங்களின் இயக்குநராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர். இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கை விழுதாக தொடர்ந்து இயங்கி வருகிறார் மயில்சாமி அண்ணாதுரை.
கே.சிவன்: கன்னியாகுமரி மாவட்டத்தின் சாக்கல்விளை எனும் குக்கிராமத்தில் பிறந்த கே.சிவன், தமிழ்வழியில் பயின்றார். 1982-ல் எம்.ஐ.டியில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பை முடித்தார். 2006-ல் விண்வெளி பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். விக்ரம் சாராபாய் விண்வெளி இயக்குநராக பதவி வகித்த கே.சிவன், 2018-ல் இஸ்ரோ தலைவரானார். முன்னதாக 2017ல் 104 ராக்கெட்டுகளை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக ஏவியதில் சிவனின் பங்கும் மிக முக்கியமானது. இவரது காலத்தில் ஏவப்பட்ட சந்திரயான் -2 வெற்றி பெறவில்லை எனில் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியாவின் முயற்சி குறித்து பேசவும் அதிரவும் வைத்தது.
முத்தையா வனிதா: சென்னையை சேர்ந்தவர் விஞ்ஞானி முத்தையா வனிதா. கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர் முத்தையா வனிதா. சந்திரயான் -2 திட்டப் பணிக்கு இணை இயக்குநராக இருந்தவர்; பின்னர் சந்திரயான் -2 திட்ட இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றார். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலைப் பெற்றவர். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநராக பதவி வகித்தவர். 2013-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் வடிவமைப்பில் முத்தையா வனிதாவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
வீரமுத்துவேல்: தற்போதைய சந்திரயான் -3 திட்ட இயக்குநராக பணியாற்றி வருகிறார். விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை படித்தார். சென்னை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். டிப்ளமோ படித்து பின் பொறியியல் படிப்பு, முதுநிலை படிப்பு என படிப்படியாக உயர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல், இப்போது தமிழரின் பெருமைக்குரியவராக உயர்ந்து நிற்கிறார்.












Click it and Unblock the Notifications