இன்னும் ஒரு ரூபாய் கூட.. கிள்ளி கூட கொடுக்கல.. மோடியிடம் சொன்ன ஸ்டாலின்.. என்ன நடக்குது மெட்ரோவில்?
சென்னை: சென்னையில் கட்டப்பட்டு வரும் மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இப்போது வரை இது தமிழ்நாடு அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிதி: இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது.
மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில் கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்ளை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோவிற்கு பணம் இல்லை: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திமுக ராஜ்யசபா எம்பி வில்சனின் கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோவின் 118.9 கிமீ கட்டம்-II கட்டுமானப் பணிகள் ஏற்கனவே மாநில நிதி மற்றும் JICA இன் வெளி நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திட்டத்தின் முதல் ரயில் டிசம்பர் 2025 இல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் முறையீடு: இந்த நிலையில்தான் சமீபத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முறையிட்டு உள்ளார். இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை.
முழுக்க முழுக்க மாநில அரசின் காசில் இருந்தே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச கடனை பயன்படுத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் முறையிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications