குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.. ஆளுநர் உரையில் தமிழக அரசு அதிரடி
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையில் இருந்ததை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்றைய தினம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கிய நிலையில் அவர் தமிழக அரசின் உரையை முழுவதுமாக படிக்க மறுத்துவிட்டு புறக்கணித்தார்.

அவர் ஒரு நிமிடம் மட்டுமே உரையை வாசித்துவிட்டு சபாநாயகருக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு , ஆளுநர் படிக்க வேண்டிய உரையை வாசித்து வருகிறார்.
அதில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம் ஆகும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது. தமிழக வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தமளிக்கிறது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தும் என நம்புகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை எனும் கொள்கை கேள்விக்குறியாகிவிட்டது. சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு போதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அந்த உரையில் இருந்ததை சபாநாயகர் அப்பாவு படித்தார்.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 370 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெல்லும். பிரதமர் நரேந்திர மோடி 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைப்பார்.
கடந்த 2019-ல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) இயற்றினோம். இதற்கான விதிகளை வெளியிட்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அதை அமல்படுத்துவோம். இந்த விஷயத்தில் எந்த குழப்பமும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க மட்டுமே சிஏஏ சட்டம் உள்ளது. இதனால் யாருடைய இந்தியக் குடியுரிமையையும் மத்திய அரசு பறிக்காது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications