மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி
சென்னை: மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன் அடுத்தகட்டமாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மறைமுகத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளதால், அந்த நடைமுறையை முழுமையாக வீடியோ பதிவு செய்யக் கோரி திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தேர்தல் அதிகாரி, வேட்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தவிர வேறு யாரையும் வாக்கு சாவடிக்குள் அனுமதிக்க கூடாது எனவும், தேர்தல் முடிவை தாமதமாக்க கூடாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது..
சென்னையில் தங்கம் விலை சரசரவென சரிவு... ஒரே நாளில் படுவீழ்ச்சி
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர். ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைமுக தேர்தல்கள் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும்,தேர்தல் நேர்மையாக நியாயமான முறையில் நடத்தப்படும் என உறுதியளித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.