இந்தியாவிலேயே முதல்முறை.. தமிழ்நாட்டில் கட்டப்படும் "ஜீனோம்" டெஸ்ட் சென்டர்.. ஏன் முக்கியம் தெரியுமா
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஜீனோம் டெஸ்டிங் சென்டரை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
உலகம் முழுக்க தற்போது பல்வேறு வகையான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை தோன்றி வருகிறது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் புதிய அலைகள் தோன்றி உள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது டெல்டா மற்றும் டெல்டா + கொரோனா வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வைரஸ் காரணமாக இரண்டாம் அலை ஏற்பட்ட நிலையில் தற்போது டெல்டா + தோன்றி உள்ளது.

மத்திய அரசு
ஒரு நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவுகிறதா என்பதை ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஜீனோம் ஆராய்ச்சி மூலம் மட்டுமே கொரோனாவின் வகை என்னவென்று கண்டுபிடித்து, அதை பகுப்பாய்வு செய்ய முடியும். கொரோனா நோயாளிகளின் உடலில் எடுக்கப்பட்ட மாதிரிகளை இந்தியாவின் ஜீனோம் ஆராய்ச்சி அமைப்பான INSACOG ஆராய்ச்சி செய்து வருகிறது.

உதவி
டெல்டா + வகை பரவல் குறித்தும், புதிய உருமாறிய கொரோனா வகைகளை கண்டுபிடிக்கவும் இந்த ஜீனோம் ஆராய்ச்சியே உதவும். INSACOG ஆராய்ச்சி மையம் மத்திய அரசின் மையமாகும். இந்தியாவில் INSACOG ஆராய்ச்சி மையம் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறது என்றால் அதன் சாம்பிள்களை இந்த INSACOG மையத்திற்கு அனுப்பித்தான் அது என்னவகை கொரோனா என்று கண்டறிய முடியும்.

கண்டுபிடிப்பு
மாநில அரசுகள் எதுவும் சொந்தமாக இந்தியாவில் ஜீனோம் ஆராய்ச்சி மையத்தை நடத்தவில்லை. எல்லோரும் INSACOGஐ மட்டுமே நம்பி உள்ளனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு சென்னையில் புதிய ஜீனோம் ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளது. சென்னையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் இந்த மையத்தை தொடங்கி உள்ளனர். இதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

20 நாட்கள்
இன்னும் 20 நாட்களில் இந்த ஆராய்ச்சி மையம் முழுமையாக அமைக்கப்படும். இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில அரசு அமைக்கும் ஜீனோம் ஆராய்ச்சி மையம் இதுதான். இதற்காக தமிழ்நாடு அரசு சென்னையில் இரண்டு அரசு மருத்துவமனைகளை தேர்வு செய்துள்ளது. அதில் ஒரு மருத்துவமனையில் டெஸ்டிங் மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி 20 நாட்களுக்குள் முடிக்கப்படும்.

வாய்ப்பு
இதன் காரணமாக இனி தமிழ்நாட்டுலேயே ஜீனோம் ஆராய்ச்சி செய்ய முடியும். என்ன வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்று எளிதாக தமிழ்நாட்டிலேயே கண்டறிய முடியும். INSACOG ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி ஜீனோம் சோதனை முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.












Click it and Unblock the Notifications