நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்! காரணம் இது தான்
சென்னை: தமிழகம் முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 12,838 உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிப் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.
கோவை வேட்டைகாரன்புதூர் 14ஆவது வார்டில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல நெல்லை பணக்குடி உள்ள 10 வார்டில் ஏஜெண்டுகள் வராததால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதேபோல திருச்சி முசிறி நகராட்சி 24ஆவது வார்டு, சிதம்பரம் நகராட்சியின் 14ஆவது வார்ட்டில் பெரியார் தெருவில் உள்ள பெண்களுக்கான வாக்குச்சாவடி மையம், பெரம்பலூர் நகராட்சி 9ஆவது வார்டு வாக்குச்சாவடி எண் 13, குமரி இடைக்கோடு பேரூராட்சி 2ஆவது வார்டு அரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையம், நெல்லை ஏர்வாடி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 2 உள்ளிட்டவற்றிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,
குறிப்பாக, கன்னியாகுமரியில் 13 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் சற்றே தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுபோல வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுத் தேர்தல் தொடங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications