மறுபடியுமா? வங்கக் கடலில் அடுத்த வாரமே புயல் சின்னம் உருவாக வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: வங்கக்கடலில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் தமிழ்நாட்டில் புயல் எதுவும் தாக்கவில்லை.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதிகள் எதுவும் புயலாக வலிமை அடையவில்லை. ஒரு தாழ்வு பகுதி சென்னை அருகே குறைந்த தாழ்வு பகுதியாக கரையை கடந்தது.
தாழ்வு மண்டலம்
அந்தமான் கடலில் உருவான இன்னொரு தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே கரையை கடந்தது. இந்த நிலையில்தான் வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய தாழ்வு பகுதி உருவாவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் புதிய தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகவில்லை.
மழை
மாறாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே ஒரே இடத்தில் நிலை கொண்டு கடலோர மாவட்டங்களில் வங்கக்கடல் அருகே மிக கனமழையை கொடுத்தது. இதன் காரணமாக தற்போது சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல்
இந்த நிலையில்தான் வங்கக்கடலில் அடுத்த வாரம் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும். இது வடக்கில் நகரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
வடமேற்கு
இதனால் ஆந்திர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இது ஒருவேளை வடமேற்கு திசையில் நகர்ந்தால் தமிழ்நாட்டிலும் கனமழையை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது முழுமையாக புயலாக மாறுமா, எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதெல்லாம் இப்போது கணிக்க முடியாது. புயல் சின்னம் உருவாவதற்கான சூழ்நிலைகள் மட்டும் தற்போது நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.