அரபிக் கடலில் தீவிர புயலான பைபர்ஜோய்.. தென்மேற்கு பருவமழை தாமதமாகுமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை: அரபிக்கடலில் உருவான புயலால் தென்மேற்கு பருவமழை தள்ளி போகுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை மேலும் வலுப்பெற்று புதன்கிழமை காலை வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த பைபார்ஜாய் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டி தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு புயல் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. கடந்த 1ஆம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் உருவான புயலால் இந்தியாவுக்கு பாதிப்பா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் கூறுகையில், புயலை பொருத்தமட்டில் அந்தமான் பக்கத்தில் உருவாகியிருந்தால் அது மேற்கு திசையில் நகர்ந்து நேராக சென்னை நோக்கியே வரும். அப்படியிருக்கும் போது அரபிக் கடலில் உருவான புயல் இங்கிருந்து விலகிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. இது கேரளாவுக்கோ கர்நாடகாவுக்கோ செல்ல வாய்ப்பில்லை. விலகித்தான் செல்லும்.
இந்த புயலால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும். இந்த புயல் வருவதால் ஈரப்பதம் உள்ள பருவமழை காற்றை எடுத்துக் கொள்கிறது. இந்திய கடற்கரையை விட்டு ஓமன், யேமன் அருகே செல்லும் போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஜூன் 11 ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த புயலால் இந்தியாவுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் தீவிர புயல் உருவாகியுள்ளது. இதன்காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஏமன், ஓமன் கடற்கரையை நோக்கி நகரும்பட்சத்தில் தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்கும் என்றும் கூறியுள்ளது. ஆனால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறி மேற்கு நோக்கி செல்லாவிட்டால், ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு பருவமழையைத் தடுத்துவிடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications