பிப்ரவரி மாதம் மழை இப்படி பெய்யுதே.. ரொம்ப அரிதான நிகழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதை பாருங்க
சென்னை: நெல்லை மாவட்டம் தாமிரபரணி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்தில் கனமழை பெய்து உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதத்தில் இந்த அளவுக்கு அந்த பகுதிகளில் கன மழை பெய்வது அரிதான நிகழ்வு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடம் வானிலை மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது. ஜனவரி மாதம் சென்னையில் வரலாறு காணாத மழை பதிவானது.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை
இப்போது, பிப்ரவரி மாத இறுதிக்கு வந்துவிட்டோம். ஆனால் இப்போது கூட சென்னை, செங்கல்பட்டு, ஊட்டி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குன்னூர், சோத்துப்பாறை பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது.

மழைக்காலம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் நாளை மறுநாள் வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இன்று கூறப்பட்டுள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் கன மழை
வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தான், தனியார் வானிலை ஆய்வாளரான, தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
|
தமிழ்நாடு வெதர்மேன்
நெல்லை மாவட்டம் தாமிரபரணி நீர் பிடிப்பு பகுதிகளில் மறுபடியும் கனமழை பெய்துள்ளது. கடந்த 5 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை பாபநாசம் கீழ் அணை பகுதியில் 118 மில்லி மீட்டர் மழை, மணிமுத்தாறு அணை பகுதியில் 100 மில்லி மீட்டர் மழை, பாபநாசம் அணை பகுதியில் 73 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதுபோல பிப்ரவரி மாதம் மழை பெய்வது அரிதான நிகழ்வு, என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

திடீர் மழை
வழக்கத்தைவிட நெல்லை மாவட்டத்தில் இந்த ஜனவரி மாதம் முதலே மழை அதிகமாக பெய்கிறது. தாமிரபரணி நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாலத்தின் மேல் தாமிரபரணி தண்ணீர் ஓடியது. இப்போது மறுபடியும் அங்கு கனமழை பெய்துள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக வானிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கும் நிலையில் இதுபோன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications