என்னா மழை.. பூண்டி ஏரியில் சக்கை போடு.. இப்படியே போனால் சென்னை ஏரிகள் நிரம்பி வழியும்.. வெதர்மேன்
Recommended Video
சென்னை: என்னா மழை என்னா மழை, பூண்டி ஏரியில் சக்கை போடு போட்ட மழை. இதே நிலை நீடித்தால் சென்னையில் உள்ள ஏரிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போக்கு காட்டி வந்தது. இதனால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு கடும் வறட்சியை சந்தித்துவிட்டோம்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஏரிகளும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் வறண்டுவிட்டன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு காலிக் குடங்களுடன் தண்ணீரை தேடி அலைந்தனர்.

பிசுபிசுவென தூறல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 110 பாரன்ஹீட் வரை வெப்பம் சென்றதால் எப்போது மழை பெய்யும் என காத்திருந்தனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட 194 நாட்களுக்கு பிறகு சென்னையில் பிசுபிசுவென தூறல் தூறியது. சிறிய மழை என்றாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வடகிழக்கு பருவமழை
இதையடுத்து வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு கைக் கொடுத்தது. இவையெல்லாம் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

வானிலை மையம்
கடந்த சில நாட்களாக ஆங்காங்கே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது குமரி கடற்பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது.

நல்ல மழை
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் பூண்டி ஏரியில் மழை வெளுத்து வாங்கியது. இப்படியே போனால் சென்னையில் உள்ள ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கலாம். நெல்லையில் பாபநாசத்தில் நல்ல மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாடு
நீரின்றி வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பும் எனக் கூறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழையை அப்படியே ஏரிகளில் சேமித்து வைத்தால் கோடையில் நாம் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications