சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை.. வெதர்மேன் தகவல்!
சென்னை: சென்னையில் ஜனவரியில் 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை 14 மணி நேரத்தை கடந்து நீடித்து வருகிறது. இதனால் ஆதம்பாக்கம், கே கே நகர், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
ஜனவரி மாதத்தில் அரிதாக பெய்யும் மழைக்கு காரணம் என்ன என பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்.

மழை
அப்போது அவர் கூறுகையில் இது முழுக்க முழுக்க லாலினோ எபெக்ட்டால் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழை முடிந்திருந்தாலும் இது போன்று மழை இதற்கு முன்னரும் பெய்துள்ளது. ஜனவரியில் மழை பெய்யும் என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை.

புயல் கிடையாது
காற்றழுத்த பகுதி கிடையாது. புயல் கிடையாது. ஆனால் நிறைய மழை பெய்துள்ளது. 2020 ஜனவரி மாதம் தமிழகத்தில் 66 மி.மீ. மழை பெய்தது. இந்த ஆண்டு இன்று காலை நுங்கம்பாக்கத்தில் காலை 8.30 மணிக்கு 63 மில்லி மீட்டர் மழையும் அதன்பின்னர் 2.30 மணி வரை 77 மி.மீ மழை என மொத்தமாக 140 மி.மீ. மழை பெய்துள்ளது.

மேக வெடிப்பு
தரமணியில் அதிகபட்சமாக நள்ளிரவு முதல் 175 மி.மீ மழை பெய்துள்ளது. 24 மணிநேரம் இன்னும் முடியாமலேயே அதி கனமழை பெய்துள்ளது என்றே சொல்லலாம். 1915 ஆம் ஆண்டு புயல் சார்ந்த மழை சென்னையில் 213 மி.மீ. பெய்தது. 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் இன்று கனமழை பெய்துள்ளது. இது மேக வெடிப்பு கிடையாது. ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ.ருக்கு மேல் மழை பெய்தால் மட்டுமே அது மேக வெடிப்பு ஆகும்.

இரவு நேரத்தில்
மழையின் அளவு இனி படிப்படியாக குறையும். அடுத்த மேகங்களும் தென்படுகின்றன. இன்று இரவு நேரத்திலும் நாளை காலையிலும் மழை பெய்யும். ஆனால் எந்த அளவுக்கு மழை பெய்யும் என சொல்ல முடியாது. வட இந்தியாவில் இருந்து மேற்கு காற்று வருகிறது. இங்கிருந்து கிழக்கு காற்று வருகிறது. இதனால் உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

ஏரி திறப்பதை
சென்னையை பொருத்தமட்டில் இன்றும் நாளையும் மழை பெய்யும். 8,9 ஆகிய தேதிகளிலும் மீண்டும் மழை பெய்யும். செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதை கண்டு அஞ்ச வேண்டாம். தென் சென்னையான தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்தது. மீனம்பாக்கத்திலும் அதிக மழை பெய்தது என்றார்.












Click it and Unblock the Notifications