‘தாக்கரே’ பட ட்ரெய்லரில் இவ்வளவு அருவருப்பான காட்சிகளா.... தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
Recommended Video
சென்னை: தமிழர், கன்னடர், மலையாளிகள் ஆகியோரை அவமதிக்கும் 'தாக்கரே' பட ட்ரெய்லருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் வெளியான 'சிவசேனா' கட்சியின் முன்னாள் தலைவர் பால் தாக்கரேவின் கதைத் திரைப்படமான 'தாக்கரே'வின் ட்ரெய்லர், தமிழர், கன்னடர், மலையாளிகளை அவமதிக்கிறது, இழிவுபடுத்துவது போல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்தின் தயாரிப்பில், அவரே திரைக்கதை, வசனம் எழுதியுள்ள 'தாக்கரே' படத்தின் ட்ரெய்லர் கடந்த 26ந் தேதி வெளியானது.
தரங்கெட்ட வசனங்கள்
இதில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் கதைப்பாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர். இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியான இந்த ட்ரெய்லர் தமிழர், மலையாளி, கன்னடர் என மொத்த தென்னிந்தியர்களும் மும்பையை ஆக்கிரமித்துக் கொண்டதாக குற்றம்சாட்டுவதுடன், அவர்களை இழித்தும் பழித்தும் தரம்தாழ்த்தியும் பேசும் தரங்கெட்ட வசனங்களையும் காட்சிகளையும் கொண்டுள்ளது; அவர்களுக்கெதிராக வன்மத்தைத் தூண்டும் வெறுப்பையும் வக்கிரத்தையும் கக்குகின்றது.
தமிழில் பெயர்ப்பலகைகள்
மும்பையில் பெரும்பாலான இடங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள், பேனர்கள் இருப்பதான காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது மண்ணின் மைந்தர்களான மராத்தியருக்கு உறுத்தலாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதான எண்ணம் வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
‘நாயே’ என்று திட்டுவதான காட்சி
இள வயது பால் தாக்கரே ஓரிடத்தில் நடந்து செல்லும்போது எதிரே வரும் மலையாளி அவர் மீது மோதிவிடுகிறார்; மோதிய அவர், பால் தாக்கரேவையே ‘நாயே' என்று திட்டுவதான காட்சி! இதன் மூலம் சொல்லவருவது, ‘மராத்தியர்கள் சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத அளவுக்கு தென்னிந்தியர்களால் இட நெருக்கடியும் இடையூறும் ஏற்பட்டிருக்கிறது' என்பதே.
இந்தி ட்ரெய்லரில் இல்லை
பால் தாக்கரே கதைப்பாத்திரம் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது; உதாரணத்திற்கு, ‘லுங்கியைத் தூக்கிவிட்டு அடிக்க வேண்டும்' என்கிற வக்கிர வசனம்! இது மராத்தி ட்ரெய்லரில் உள்ளது; ஆனால் இந்தி ட்ரெய்லரில் இல்லை; உள்நோக்கத்துடன் அதில் தவிர்க்கப்பட்டுள்ளது.பால்தாக்கரேவின் ஆவேசப் பேச்சைக் கேட்டு உத்வேகமடையும் ஓர் இளைஞன், உடுப்பி ஹோட்டல் மீது கல்வீசித் தாக்கும் காட்சி! இது கன்னடர் மீதான வெறுப்பின் வெளிப்பாடு!
சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ரவுத்
இப்படி ஒரு ஃபாசிஸ்டாக வாழ்ந்த பால் தாக்கரேவின் கதையை அவரது சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ரவுத் சினிமாவாக்குவதில் வியப்பொன்றும் இல்லை. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பல கட்சிகளும் விலகிவிட்ட நிலையில், விலகாதிருக்கும் ஒருசில கட்சிகளில் சிவசேனாவும் ஒன்று. அந்த சிவசேனாவின் எம்பி சஞ்சய் ரவுத், மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டே, திட்டமிட்டு, பாஜகவுக்கும் விருப்பமான வெறுப்புப் பேச்சுகளுடன் கூடிய அருவருப்பான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்.
அவமதிக்கும் ‘தாக்கரே’
இதனை, ‘வெறுப்பை விற்பனை செய்து காசாக்கும் செயல்' என துணிச்சலுடன் நடிகர் சித்தார்த் கண்டனம் செய்திருப்பது சரியே. தமிழர், கன்னடர், மலையாளிகள் ஆகியோரை அவமதிக்கும் ‘தாக்கரே' பட ட்ரெய்லருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.