திருவாரூர் இடைத் தேர்தல்.. பாஜக போட்டியிடுமா.. தமிழிசை சொல்ல வருவது என்ன??
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து தமிழிசை சவுந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக பாஜக தலைவரின் இந்த ஒத்த ட்வீட் என்ன சொல்கிறது?
கடந்த சில மாதங்களாகவே இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்பதில் சந்தேகம் எழுந்து வந்தது. கஜா புயல் வந்தபோது, இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு "புயல் பாதித்த இடங்களில் நிவாரண பணிகள் நடைபெற்றுவருவதால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம்" என்றார்.

சந்திக்க தயார்
பிறகு திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று கோர்ட் அறிவித்ததை அடுத்து இது சம்பந்தமாக மீண்டும் தமிழிசையிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, "எப்போது தேர்தல் நடந்தாலும் தேர்தலை சந்திக்க தயார்" என்று கூறினார்.

புது அறிவிப்பு
இந்நிலையில் ஜன 28-ல் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்த போவதாக புது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழிசை ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "திருவாரூரில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வாக்குகளாக அளிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவின் அர்த்தம் என்ன என்று சரியாக விளங்கவில்லை. முதலில் பாஜக திருவாரூரில் போட்டியிட போகிறதா என்பதை பகிரங்கமாக தமிழிசை சொல்லவில்லை.

சாதகமான ஓட்டுகள்
தமிழக முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் - திமுகவின் 50 ஆண்டுகால தலைவர் - என பல அவதாரம் பூண்டு மறைந்தவரான கருணாநிதியின் சொந்த ஊர் அது. கடைசியாக இருந்த தொகுதியும்கூட. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இது எல்லாவற்றையும்விட அவரது மறைவால் அனுதாப ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதகமாகவே விழும் என்பதில் சந்தேகம் இருக்காது.

தினகரன் சர்ப்ரைஸ்?
இந்நிலையில், இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அப்படியென்றால், திமுகவுக்குதான் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்று சொல்ல வருகிறாரா? அல்லதுஆர்.கே. நகர் போன்று திருவாரூரிலும் டெபாசிட் இழக்க நேரிடும் என்று சொல்ல வருகிறாரா? அல்லது அதிமுக அல்லது தினகரன் ஏதாவது சர்ப்பிரைஸ் கொடுப்பார்கள் எனக் கூற வருகிறாரா என்று தெரியவில்லை!!

அறுவடை செய்வது யார்?
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவாரூரும் ஒன்று. எனவே அதிமுகவுக்கும் சரி, பாஜகவுக்கும் சரி மிகப் பெரிய சவால் இந்தத் தொகுதியில் காத்திருக்கிறது. மொத்த கோபத்தையும் காட்ட மக்கள் முயல்வார்கள் என்பதால் அதை யார் அறுவடை செய்யப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

கேலி - கிண்டல்
பாஜகவைப் பொறுத்தவரை இன்னொரு சங்கடம் காத்துள்ளது. ஆர்.கே.நகரில் அது நோட்டாவை விட குறைந்த வாக்குகளைப் பெற்று பெரும் சிக்கலுக்குள்ளானது. இன்று வரை அந்த கேலி கிண்டல் நீடித்து வருகிறது. அந்த அவலத்தை திருவாரூரில் அது துடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேர்ந்துள்ளது. எனவே பாஜகவைப் பொறுத்தவரை இங்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது.. தேர்தலில் போட்டியிட்டால்!












Click it and Unblock the Notifications