தூங்கி வழியும் TAMPCOL நிறுவனம்.. சுகாதாரத்துறை செயலர் மாறி பல மாதமாகியும் நோ அப்டேட்!
சென்னை: தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தின் (TAMPCOL) இணையப்பக்கம் 6 மாதங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனமானது சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட மருத்துவத்துக்கு தேவையான மருந்துகளை தயாரிக்கும் பணிகளை செய்து வருகிறது.

சித்த மருத்துவத்தில் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சூரணங்கள், தைலங்கள், எண்ணெய்கள், மற்றும் இன்னும் பல மூலிகை பொருட்களை டாம்ப்கால் தயாரிக்கிறது. அரசு நிறுவனமான டாம்ப்காலை நம்பி பெரும்பாலானோர் சித்த மருந்துகளை வாங்குகின்றனர்.
இந்நிலையில் இப்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், அலோபதி மருந்துக்கு மாற்றாக மண் சார்ந்த மருத்துவமான சித்தாவுக்கு மாறி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு சித்த மருத்துவத்துக்கு மாறுபவர்கள் டாம்ப்கால் நிறுவனத்தின் இணையதளப் பக்கத்திற்குள் சென்று அதன் செயல்பாட்டு முறைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தின் (TAMPCOL) இணையப்பக்கம் கடந்த 6 மாதங்களுக்கு மேல் செயல்படாமல் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. அதற்கு சாட்சியாக சுகாதாரத்துறை செயலாளர் பெயரே அங்கு தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் உள்ள நிலையில் பத்திரபதிவுத்துறை செயலாளராக உள்ள பீலா ராஜேஷ் பெயர் தான் இன்னும் டாம்ப்கால் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் உள்ளது. இதுமட்டுமல்லாமல் டாம்ப்காலின் புதிய தயாரிப்புகள் குறித்த எந்த விவரம் வெளியிடப்படவில்லை.
இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மக்களுக்கு நம்பகமான தகவலை அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications