மின் இணைப்பு துண்டிப்பு குறித்து எஸ்எம்எஸ் வந்தால்! என்ன செய்ய வேண்டும்! டான்ஜெட்கோ விளக்கம்
சென்னை: கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் அதை பொருட்படுத்தாதீர்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அது போல் ஏதேனும் மெசேஜ்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளது.
டிஜிட்டல்மயமானதிலிருந்து பணம் திருட்டு எங்கிருந்துதான் வரும் என்பது தெரியவில்லை. எந்த ரூபத்திலும் நமது பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. முன்பெல்லாம் அடித்து பணம் பிடுங்கிய காலம் போய் இப்போது உட்கார்ந்த இடத்திலிருந்தே பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

கால் சென்டர் போல் யாருக்காவது ரேண்டமாக ஒரு நம்பருக்கு போன் செய்து ஏடிஎம் பிளாக் செய்யப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய உங்கள் ஏடிஎம் எண்ணையும் பின் நம்பரையும் சொல்லுங்கள் என கூறி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பிறகு உங்கள் செல்போன் எண்ணுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்ததாகவும் இதை பெற ரூ 10000 செலுத்த வேண்டும் என்றும் பண மோசடி நடந்தது.
பிறகு ஒரு வினாடியில் பல கோடி லோன் தருகிறோம் என கூறி அவர்களை சிக்க வைத்து கந்து வட்டி போல் பணத்தை கறப்பது போன்ற மோசடிகள் நடந்து வருகின்றன. அது போல் உங்கள் மெயில் ஐடியின் பாஸ்வேர்டு எனக்கு தெரியும், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள். நீங்கள் பார்த்ததை நான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன்.
அதை இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் குறிப்பிட்ட டாலர்களை எனக்கு அனுப்ப வேண்டும் என மிரட்டலும் வருகிறது. இதிலும் சிக்கும் சிலர் பணத்தை அனுப்பிவிட்டு இதை போலீஸில் புகார் அளிக்க முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மின்சார கட்டணம் செலுத்தவில்லை. அதனால் உங்கள் மின் இணைப்பு சில மணி நேரத்தில் துண்டிக்கப்படும் என மெசேஜ் வரும்.
மேலும் பணம் செலுத்த ஒரு லிங்க் அனுப்பப்படும். இல்லாவிட்டால் ஒரு செயலியை டவுன்லோடு செய்ய சொல்லி கேட்கும். இதில் ஏதாவது ஒன்றை செய்து விட்டால் உங்கள் பணம் மொத்தம் போச்சு! இது போல் நிறைய பேர் தங்கள் பணத்தை இழந்து சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
மோசடி செய்வோரின் ஐபி அட்ரஸ்ஸை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகிறார்கள். எனவே போலீஸில் புகார் செய்தாலும் சில விஷயங்களில் நம்மால் பணத்தை திருப்பி பெறவே முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து போலீஸாரும் எத்தனையோ விழிப்புணர்வு பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு மின்சாரம் வாரியம் வெளியிட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது: கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர்!
முதலில் உங்கள் கட்டண நிலையினை மின்வாரிய வலைதளம் / செயலியில் சரி பார்க்கவும். வந்த எண்ணை அழைக்கவோ/ பணம் செலுத்தவோ வேண்டாம். உடனே சைபர் குற்ற எண் 1930-ஐ அழைக்கவும். பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது போல் அலர்ட்கள் வந்தால் நீங்கள் உங்கள் பதற்றம் ஏதும் படாமல் பில்களை செக் செய்யுங்கள். எந்த போன் அழைப்புகளுக்கும் பதில் அளிக்காதீர்கள். மீண்டும் அந்த நம்பரை அழைக்காதீர்கள். எந்த லிங்கையும் கிளிக் செய்யாதீர்கள், செயலியையும் டவுன்லோடு செய்யாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications