டானியா முகம் இப்போ அழகா இருக்கு.. புதிதாக குழந்தை பிறந்தது போல் மகிழ்ச்சி.. தாய் நெகிழ்ச்சி
சென்னை: ஆவடி சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தனக்கு புதிதாக குழந்தை பிறந்தது போன்ற மகிழ்ச்சி இருப்பதாக டானியாவின் தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ்- சவுபாக்யா தம்பதி. இவர்களது 9 வயது மகள் டானியா. இவருக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக இவருக்கு பல்வேறு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை.
இதனால் சிறுமியை பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் புறந்தள்ளினர். ஓடியாட வேண்டிய வயதில் யாரும் தன்னை சேர்த்துக் கொள்ளாததால் அந்த பிஞ்சு மனம் எத்தனை பாடுபட்டிருக்கும்?

சிறுமி
இதையடுத்து அந்த சிறுமி பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டார். பின்னர் தனது முகத்தை சரி செய்ய முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முதல்வரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சிறுமியின் வீட்டுக்கு சென்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறினர்.

இலவச அறுவை சிகிச்சை
இந்த நிலையில் சிறுமிக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதாக கூறியதை அடுத்து சிறுமி ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 17 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு 22 ஆம் தேதி வரை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.

டானியா
கடந்த 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு டானியாவுக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை மாலை 5 மணிக்குத்தான் முடிந்தது. அதாவது 9 மணி நேரம் உயர் தொழில்நுட்ப வசதி மூலம் 31 மருத்துவக் குழுவினர் செய்திருந்தனர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த டானியா பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

திரவ உணவு
சிறுமிக்கு திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுமியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது சிறுமியின் முகம் பழைய நிலைக்கு எப்போது வரும், முகத்தில் உள்ள புள்ளிகள் எப்போது மறையும், அடுத்த முறை நான் டானியாவை பார்க்க வரும் போது அவரது முகத்தில் புள்ளிகள் நீங்கியிருக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

பள்ளி செல்வார்
இதுகுறித்து டானியாவின் தாய் சவுபாக்யா கூறுகையில் என் குழந்தை டானியா விரைவில் பள்ளிக்குச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. என் மகளின் முகம் தற்போது அழகாக மாறிவிட்டது. முதல்வருக்கு நன்றி. புதிதாக குழந்தை பிறந்தது போல் உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது என்றார் சவுபாக்யா.












Click it and Unblock the Notifications