ஓபிஎஸ் டீமின் ‘டார்கெட் கே.பி.எம்’.. பின்னணி என்ன? - துரோகி, சாதி வெறி.. அட்டாக் முனுசாமி!
சென்னை : ஈபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக அட்டாக் செய்து பேசி வருகின்றனர். இதற்கு பின்னணி என்ன?
தர்மயுத்தத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்தவர் கே.பி.முனுசாமி. சமீப சில மாதங்கள் முன்பு வரை ஓபிஎஸ் உடன் நல்ல நட்புடனே இருந்து வந்த முனுசாமி, ஓற்றைத் தலைமை மோதலுக்குப் பிறகு ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துப் பேசத் தொடங்கினார்.
இது ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் அணியில் இருந்த பலர் ஈபிஎஸ் பக்கம் சென்றிருந்தாலும் கூட முனுசாமியின் செயல் ஓபிஎஸ்ஸுக்கு சங்கடத்தைக் கொடுத்துள்ளது.
ஈபிஎஸ் பக்கம் சென்றதோடு அல்லாமல், ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சிப்பதில் முன்வரிசையிலும் நிற்பதால், பொறுத்துக்கொள்ள முடியாத ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அட்டாக்கை கையில் எடுத்துள்ளனர்.

ஜெ.வால் ஓரங்கட்டப்பட்ட முனுசாமி
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, 2016 காலகட்டத்தில் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். அமைச்சரவையில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட அவர், அடுத்தநாளே மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். தேர்தலில் பாமகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, குவிந்த புகாரின் பேரில் கே.பி.முனுசாமி மீது நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா.

ரீ-என்ட்ரி
பின்னர், ஜெ.மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவருக்கு ஆதரவு அளித்தார் முனுசாமி. ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் கே.பி.முனுசாமிக்கு பெற்றுத் தந்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ்ஸுடன் இணைந்த பிறகு தான் முனுசாமியின் அரசியல் வாழ்க்கைக்கே ரீ-எண்ட்ரி கிடைத்தது எனலாம்.

ஓபிஎஸ் அதிர்ச்சி
கே.பி.முனுசாமிக்கு ஓபிஎஸ் தரப்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து வைத்திருந்த நிலையில் தான், அவர் சமீபத்தில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலில் முழுமையாக ஈபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார். இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர் முகாமுக்குச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஓபிஎஸ்ஸை கடுமையாகத் தாக்கியும் பேசி வந்தார் முனுசாமி.

முனுசாமிக்கு குறி
இதனால், புகழேந்தி, கோவை செல்வராஜ் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக முனுசாமியை அட்டாக் செய்து பேசி வருகின்றனர். சமீபத்தில், சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது கூட, பலர் கே.பி.முனுசாமி பற்றி புலம்பித் தள்ளியதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை தனியாகச் சந்தித்த ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முனுசாமி ஆதரவாளர்களாக இருப்பவர்களை தம் பக்கம் இழுக்க அப்பகுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

வெட்கப்படுகிறேன்
நேற்று கூட செய்தியாளர்களைச் சந்தித்த கேபி முனுசாமி, கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஓ.பி.எஸ் ஈடுபட ஆரம்பித்து விட்டார். அதிமுகவில் இருப்பதற்கு தகுதியற்ற நபராக ஓபிஎஸ் இருக்கிறார், அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர், ஓபிஎஸ்க்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ சுயநலமாக இருக்கிறார் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

எட்டப்பன்
இது ஓபிஎஸ் தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையொட்டியே நேற்று புகழேந்தி, கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கே.பி.முனுசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினர். புகழேந்தி, முனுசாமியை அரசியல் பச்சோந்தி என்று விமர்சித்தார். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி 'எட்டப்பன்' என்று குறிப்பிட்டார்.

சாதியைச் சொல்லி கமெண்ட்
இந்நிலையில், இன்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முனுசாமியை கடுமையாகச் சாடியுள்ளார். ஜெயலலிதாவின் சாதியைச் சொல்லி முனுசாமி கமெண்ட் அடித்ததாகவும் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்டாக்
மேலும், எடப்பாடி பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்று அந்த அணிக்கு சென்று இருக்கிறார் முனுசாமி என்றும், எடப்பாடி பழனிசாமியின் இடத்தைப் பிடிப்பது தான் முனுசாமியின் நோக்கம் என்றும் ஓபிஎஸ் தரப்பினரால் குற்றம்சாட்டப்படுகிறது. கே.பி.முனுசாமியின் சுயரூபத்தை ஈபிஎஸ் புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருகின்றனர்.

என்ன காரணம்?
ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்களிலேயே ஓபிஎஸ்ஸால் அதிகமாக அட்டாக் செய்யப்படுபவர் யாரென்று பார்த்தால் அது கேபி.முனுசாமி தான். ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார், சிவி சண்முகம் எல்லாம் கூட அதன் பிறகு தான் வருவார்கள். அந்தளவுக்கு அட்டாக் செய்யக் காரணம், ஓபிஎஸ்ஸுக்கு முனுசாமி, துரோகம் செய்துவிட்டதாக அவர்கள் கருதுவதால் தான்.

பின்னணி
ஓபிஎஸ் பக்கம் சேர்ந்து, அதிமுகவில் முக்கிய பதவியை பெற்றுவிட்டு, ஓபிஎஸ் ஓரங்கட்டப்பதும், இப்போது ஈபிஎஸ் பக்கம் சென்று, ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கிப் பேசி வருவது ஓபிஎஸ் ஆதரவாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. பச்சைத் துரோகம் எனக் குமுறுகிறார்கள். இதன் காரணமாகவே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை 'டார்கெட்' செய்து விமர்சித்து வருகின்றனர் எனக் கூறுகிறார்கள் ர.ரக்கள்.












Click it and Unblock the Notifications