சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பொதுவாக தேர்தல் நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த தேர்தலுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் எத்தனை நாட்கள் மூடப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட மது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே மதுபான கடைகளை மூடுவதன் மூலம் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்.
இது குறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்.21 முதல் ஏப்.23 இரவு வரை மூடப்பட வேண்டும். புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இது பொருந்தும்.
அதாவது அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 காலை 10 மணி முதல் ஏப்.23ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல வாக்குப்பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே, அனைத்து வகையான பிரச்சாரங்களும் நிறுத்தப்படும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் தேர்தல் அமைதியாக நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications