TASMAC: சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் திடீர் போராட்டம்.. பரிதவித்த மதுப்பிரியர்கள்
சென்னை: சென்னையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதால் எங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றும், அதனை வைப்பதற்கு இடம் இல்லை என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 11 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகளை மாலை 3 மணி வரையும் திறக்காமல் சென்னை அம்பத்தூரில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுப்பிரியர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

காலி மது பாட்டில்கள்
டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க கோரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதன்படி டாஸ்மாக்குகளில் மதுபாட்டில்களை வாங்கும்போது 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கிவிட்டு, பின்னர் காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப ஒப்படைக்கும் போது 10 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.
ஏற்கனவே இந்தத் திட்டம் நீலகிரி, கோவை, பெரம்பலூர், நாகை, அரியலூர், திருவாரூர், தருமபுரி, திண்டுக்கல், தேனி மற்றும் குமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது சென்னையில் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் அறிவிப்பு வெளியிட்டது.
சென்னையில் அமலுக்கு வருவதாக
அதாவது முதல்கட்டமாக சென்னையின் இன்று முதல் மூன்று முக்கிய பகுதிகளான சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி வாடிக்கையாளர்கள் காலி மதுபாட்டில்களை கொடுத்தால் டாஸ்மாக் ஊழியர்கள் ரூ.10 திருப்பி அளிக்க வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் கடையை திறக்காமல் போராட்டத்தில் குதித்தனர். காலிப்பாட்டில்களை திரும்பப் பெறுவதால் எங்களுக்கு வேலைப்பளு அதிகம் ஆகியுள்ளது என்றும், காலிப்பாட்டில்களை வாங்கி வைப்பதற்கு போதிய இடம் இல்லை என்றும் கூறினர்.
காலி பாட்டில்களை வாங்கி வைப்பதற்கான இடங்களை அமைத்து கொடுத்துவிட்டு அதற்கு பிறகு இந்த திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் சரியாக இருந்து இருக்கும். எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம்.. இல்லையென்றால் காலி பாட்டில்களை திரும்பப் பெற தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
காலை 11 மணிக்கு திறக்க வேண்டிய டாஸ்மாக் கடைகளை திறக்காமல் 4 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை அம்பத்தூர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த தீர்ப்புக்கு பிறகு இந்த திட்டத்தினை அமல்படுத்தலாம் என்றும், அதுவரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, டாஸ்மாக் சென்னை மண்டல மூத்த அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் மது வாங்க முடியாமல் மது பிரியர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications