ஆஹா லிஸ்ட்லயே இல்லையே.. 'களம் எட்டில் டாஸ்மாக்'.. அச்சத்தில் ஊழியர்கள், குஷியில் குடிமகன்கள்
சென்னை: மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாம் டாஸ்மாக் நிர்வாகம். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகாரில் சிக்கும் ஊழியர்கள் இனி அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளார்கள்.. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மண்டலத்தில் 50 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
டாஸ்மாக் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்ய 2003-ம் ஆண்டு அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போது ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூலம் 2003-2004-ம் ஆண்டில் மது விற்பனையால் அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 93 லட்சம் வருவாய் வந்துள்ளது . இந்நிலையில் ஒரு கட்டத்தில் 10 ஆயிரம் கோடியாக உயர்ந்த வருவாய், அடுத்ததாக கொரோனாவிற்கு முன்னரே 30 ஆயிரம் கோடியை தொட்டது. தற்போது 2023-2024-ம் ஆண்டில் ரூ.45 ஆயிரத்து 855 கோடி என்கிற அளவில் உயர்ந்துள்ளது.

வரும் ஆண்டில் 2024-2025-ம் ஆண்டு அது ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மது விற்பனை தடாலடியாக குறைந்துள்ளது. மதுவிற்பனை எல்லா மாவட்டங்களிலும் கணிசமாக குறைந்துள்ளது. உதாரணத்திற்கு 6 முதல் 13.5 சதவீதம் வரை குறைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
கொரோனாவில் கஞ்சா, உள்ளிட்ட போதை பொருட்கள் பக்கம் பலர் திரும்பியதால், படிப்படியாக டாஸ்மாக் வருமானம் குறைந்துவிட்டதாம். இதனால் விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைஊழியர்கள் பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் விற்பனை சரிவு அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு நெருக்கடியை தந்துள்ளதாம்.
இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக குவாட்டருக்கு ரூ.10 அதிகமாக வாங்கப்படுவதாக வந்த புகார்கள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம். குவாட்டருக்கு 10 ரூபாய், ஆஃப் பாட்டிலுக்கு 20 ரூபாய், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 வரை அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளதால் டாஸ்மாக் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறதாம்
டாஸ்மாக் நிர்வாகம் அடிக்கடி கடைகளில் சோதனை மேற்கொண்டு, அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டித்து அபராதம் விதித்தாலும், சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது அபூர்வமாகவே இருந்தது. இந்நிலையில் புகாருக்கு உள்ளாகும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து வருகிறதாம் டாஸ்மாக். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மண்டலத்தில் 50 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் 137 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் அச்சம் அடைந்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளுக்கான மாத வாடகை தொகையை குறைந்த அளவே நிர்வாகம் தருகிறது என்றும், மின் கட்டண தொகையையும் முன்கூட்டியே தருவதில்லை என்றும் கடைகளில் மதுபாட்டில்களை கொண்டுவந்து இறக்குவதற்கான கூலியையும் கொடுப்பதில்லை என்றும் கூறும் ஊழியர்கள், ஒரு பெட்டிக்கு ரூ.5 முதல் ரூ.12 வரை இறக்கு கூலி கொடுக்கிறோம் என்றும் உடைந்த நிலையில் வரும் மது பாட்டில்களுக்கு, மாற்று பாட்டில்கள் தருவதில்லை. இதனால், உடைந்த பாட்டில்களுக்கான தொகையையும் நாங்களே கொடுக்க வேண்டியுள்ளதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தங்களுக்கு சம்பளம் குறைவு. எனவே இதுபோன்ற செலவுகளுக்கு கூடுதல் பணம் வசூலிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறுகிறார்கள். போதுமான சம்பளம் வழங்கி, கடை வாடகை, இறக்கு கூலி, மின்கட்டணம் போன்றவற்றை முறையாக அளித்தால் தான் இந்த பிரச்சனை தீரும் என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.
இதுஒருபுறம் எனில், டாஸ்மாக் கடைகள் நவம்பர் முதல் மொத்தமாக மாறப்போகிறது. கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுதை கட்டுப்படுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கும் நடைமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபானங்களை வாங்கும் நடைமுறையை கொண்டு வரப்பட உள்ளது. கியூஆர் கோடு ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபானங்கள் வாங்கும் நடைமுறையும் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 500-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை அடிப்படையில் நவம்பர் மாதம் முதல் அமலாகிறது.












Click it and Unblock the Notifications