இறைச்சி கடைகள், மதுக்கடைகள் இன்று மூடல்.. டாஸ்மாக், கறிக்கடைகளை மீறி திறந்தால் கடும் நடவடிக்கை
சென்னை: இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு எடுத்து நடத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் வருமானத்தை அள்ளி அள்ளி கொடுக்கக்கூடிய துறையாக டாஸ்மாக் நிறுவனம் விளங்கி வருகிறது.

வழக்கமாக தீபாவளியை போலவே பொங்கல் பண்டிகைகளிலும் என்றாலே டாஸ்மாக்கு வசூல் மும்மடங்கு உயர்வது வாடிக்கையாகும். அந்தவகையில், தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கும், டாஸ்மாக் விற்பனை சூடுபிடிக்கும் என்று கடந்த மாதம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.
விடுமுறை: எனினும், இந்த வருடம் 9 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. குறிப்பாக, காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று திருவள்ளுவர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. எனவே, இன்றைய தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குடியரசு தினம் 26ம் தேதியும் மதுக்கடைகள் மூட உத்தரரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "ஜனவரி 15ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்கள்: மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சிக் கூடங்கள், இறைச்சி விற்பனையகங்கள் மூடப்படுவது வழக்கமாகும்.. இதேபோல சில குறிப்பிட்ட நாட்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 15ம் தேதியான நாளை மறுநாள் இறைச்சி கூட்டங்களை மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இறைச்சி கடைகள்: இந்த தடையை மீறி யாரேனும் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.. இதையடுத்து, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிகுப்பம் ஆகிய இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்பட்டுள்ளது..
இதனிடையே, நேற்றைய தினம் திடீரென ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவியது.. அதாவது, மதுக்கடைகள், இறைச்சி கடைகளை இந்த வருடம்தான் மூட உத்தரவு பிறப்பித்திருப்பதாக, இணையத்தில் யாரோ கிளப்பி விட்டுள்ளனர். எனினும், தமிழக அரசின் உண்மை சரிப்பார்ப்புக்குழு சார்பில், இதுகுறித்து உடனடி விளக்கம் தரப்பட்டது.
விளக்கம்: அதில், இது புதிய உத்தரவல்ல. 1980-ம் ஆண்டில் இருந்து வெளியாகும் அறிவிப்பே. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் ஜனவரி 23, 1980 தேதியிட்ட அரசாணை 45-ன் படி, திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி ஆகிய 3 நாட்களில் இறைச்சிக்கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது" என்று விளக்கம தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications